உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரோ தற்போது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம். பிரச்சனை இல்லை.
முதலில் இந்த போக்கில் எந்த தீங்கும் இல்லாத மாதிரிதான் இருந்தது. ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும்.
ஏதேனும் தொழில் யோசனையின் ஒரு பகுதியா இது? ஒரு தரவு வங்கி தயாரிப்பதற்காக, உங்கள் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வேண்டுமென்றே கேட்கிறார்களா? இதற்கு பின் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? இதில் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டுமா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடுவதற்கு முன்னால், இதுகுறித்து பேஸ்புக் என்ன கூறியுள்ளது என்று பார்க்கலாம். "இது பயன்பாட்டாளர் ஒருவரால் தொடங்கப்பட்ட மீம். தானாகவே வைரலாகி உள்ளது. இந்த ட்ரென்டை பேஸ்புக் தொடங்கவில்லை" என்கிறது.
"ஏற்கனவே இருக்கும் புகைப்படத்தை வைத்துதான் மீம்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக் இதனை எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் பயனாளர்கள், முகம் அடையாளப்படுத்தும் தன்மை என்று அறியப்படும் பேஷியல் ரெகக்னிஷன் வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."
பேஸ்புக் தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், #10YearChallenge குறித்து மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த மாதிரியான விளையாட்டுகள் அல்லது மீம்கள் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன. இவற்றின் திட்டம் தரவுகளை சேகரிப்பது.
இந்த சவால் ஒரு டைம் பாஸோ அல்லது கேளிக்கையோ இல்லை, இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.
"இந்த புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்படும்போது, அவற்றை மார்ஃப் செய்து மாற்றலாம், உங்களை இலக்காக ஆக்க முடியும்."
"பேஷியல் ரெகக்னிஷன் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை வைத்து 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு வடிவம் மாறியுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்" என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
இந்த புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது தானே? ஏற்கனவே பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படம், தற்போது இதனால் என்ன ஆபத்து?
"குறிப்பிட்ட புகைப்படம் பேஸ்புக்கில் ஏற்கனவே இருப்பது உண்மைதான். ஆனால், அது எங்கேயோ இருந்தது. இந்த சவாலை ஏற்று உங்கள் புதிய புகைப்படத்தோடு, பழைய புகைப்படத்தை வைக்கிறீர்கள்."
"இதுபோன்று செய்யும்போது, இதுவரை சமூக வலைதளங்களில் இல்லாத புதிய தரவுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதனை சைபர் கிரிமினல்கள் தவறாக பயன்படுத்த முடியும்."
"எனவே, இது மாதிரியான சவால்களை தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், நீங்கள் உங்கள் புகைப்படத்தை பகிரும்போது, நிறுவனங்களுக்கு உங்களது பழைய மற்றும் முக்கியமான தகவல்களை தருகிறீர்கள். மேலும், எந்த அளவிற்கு அவற்றை தவறாக பயன்படுத்த முடியும் என்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்கிறார்கள் அவர்கள்.
யாராவது உங்களது பேஸ்புக் படங்களை பேஷியல் ரெக்ககனைஷன் அல்காரிதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் அது தவறாகுமா?
தொழில்நுட்பம் என வரும்போது நீங்கள் என்ன தரவுகளை உற்பத்தி செய்கிறீர்கள் மற்றும் அந்த தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம்.
இம்மாதிரியான சவால்களில் இருந்து உங்களின் முகம் உங்களின் வயது சார்ந்து எப்படி மாறியுள்ளது என்ற தகவல்களை அவர்களின் விளம்பரத்துக்கு பயன்படுத்தமுடியும்.
முக ஆதாரங்கள் எந்தவொரு தருணத்திலும் காப்பீடுக்கான மதிப்பீடு மற்றும் உடல் நலன் சார்ந்த சேவைகளில் பயன்படுத்த முடியும். நீங்கள் உங்களின் வயதை ஒப்பிடும்போது விரைவாக முதுமை அடைகிறீர்கள் எனில் நீங்கள் காப்பீடு நிறுவனங்களுக்கு நல்ல நுகர்வோர் கிடையாது.
காவல்துறைக்கோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துக்கு இந்த தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தரவுகள் மட்டும் கிடைப்பதில்லை, குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களின் தகவல்களும் அவர்களின் கைகளுக்குச் செல்கின்றன என்ற அச்சகமும் இன்னமும் இருக்கிறது.













