பேஸ்புக், டெலிகிராம் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த ரஷ்யா

SOCIAL SHARE
Pin It

சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியவை, சட்டங்களை மதிக்காமல்,  தன்னிச்சையாக செயல்படுவதாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றன. 

தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாகக் கூறி பேஸ்புக் (Facebook) மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்ய அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நாட்டில் சமூக ஊடக தளங்களின் தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாஸ்கோ நீதிமன்றம் வியாழக்கிழமை பேஸ்புக்கிற்கு 17 மில்லியன் ரூபிள் மற்றும் டெலிகிராம் 10 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்தது. சமீபத்திய வாரங்களில் இரு சமூக ஊடகங்களுக்கும்  அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மே 25 அன்று, பேஸ்புக் சட்டவிரோதமான கருத்துக்கள் அடங்கிய உள்ளடக்கத்தை அகற்றாததற்காக ரஷ்ய அதிகாரிகள், பேஸ்புக்கிற்கு 26 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்தனர். அதே போன்று, ஒரு மாதத்திற்கு முன்பு, ஆர்ப்பாட்டங்களை தூண்டு வகையிலான உள்ளடக்கத்தை அகற்றாததற்காக டெலிகிராமிற்கும் 50 மில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது.

சில மாதங்கள் முன்னதாக, ரஷ்யாவில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை தூண்டும் வகையிலும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுவர்கள் மத்தியில் ஆபாச கருத்துக்களை பரப்பும்  வகையிலும், போடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக  நிறுவனங்கள் மீது வழக்கு ஒன்றை  தொடுத்தனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அதிகம் விமர்சிக்கும் எதிர் கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  சமூக ஊடகங்கள் மூலம் ஆதரவு திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு அமைப்பான, ரோஸ்கோம்னாட்ஸர், ஆபாசம், வன்முறை  ஆகியவற்றை தூண்டும் பதிவுகளை அகற்றத் தவறிய ட்விட்டரின் செயல்பாட்டை தற்காலிகமாக முடக்கியது. மேலும் வருங்காலத்தில், ட்விட்டரை முற்றிலுமாகத் தடை செய்யலாம் எனவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM