டாக்டர் கமலா செல்வராஜூம், அவரது மகன், டாக்டர் தீபுவும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தினமும் நோய் எதிர்ப்புச் சக்திக்கான கஷாயம் அருந்தவேண்டும் என்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.
ஊசி போட்ட பின், மது அருந்துவது, நீச்சல் பயிற்சி செய்வது தவிர, வேறு எந்த கட்டுப்பாடும் இல்லாமல், வழக்கமான வேலைகளை செய்யலாம் என்றும் வாய்ப்பு உள்ள அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கமலா செல்வராஜே ஒரு கஷாயத்தை தயாரித்து, கடந்த பல மாதங்களாக தினமும் குடிப்பதாகவும், பணி செய்பவர்களுக்கும் கொடுப்பதாக அவர் கூறுகிறார்.
வெற்றிலை, இரண்டு; தவசி முருங்கை இலை, கற்பூரவல்லி, வேப்பிலை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு இலை, இரண்டு; துளசி இலை, ஒரு கொத்து; பிரியாணி இலை, கறிவேப்பிலை, ஒரு கொத்து; மல்லி தழை சிறிது; புதினா சிறிது; சின்ன வெங்காயம், 2; பூண்டு, 2 பல்; இஞ்சி, ஒரு துண்டு; எலுமிச்சைப் பழம், 1; மிளகு கால் ஸ்பூன்; சீரகம் அரை டீ ஸ்பூன்; கிராம்பு, 4; ஓமம் ஒரு டீ ஸ்பூன்; பீட்ரூட் கால் அளவு; நெல்லிக்காய், 4. இஞ்சி, பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி, நெல்லிக்காயை விதை நீக்கி, எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி, மேற்கூறிய அனைத்து பொருட்களையும், 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும் .
பாதியாக வற்றியதும், பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து, நாள் முழுதும் சிறிது சிறிதாக குடிப்பேன். வேப்பிலை இருப்பதால். லேசாக கசக்கும்; அதை பொருட்படுத்தக் கூடாது. இந்த நீரில் வைரசை அழிக்கும் எதிர்ப்பு சக்தி, இயற்கையாகவே உள்ளது.
இது தவிர, காலை, மாலை இரு வேளையும், கொதிக்கும் நீரில் நீலகிரி தைலம் அல்லது சிறிது விக்ஸ் போட்டு, ஆவி பிடிப்பேன்; உஷ்ணத்தில் கிருமிகள் அழிந்துவிடும்.
இந்த மாதிரி ஒரு கஷாயத்தை நீங்களே தயார் செய்து வைத்து, அவ்வப்போது குடியுங்கள். ஆவி பிடித்து, பயப்படாமல், அதே நேரம் கவனமாக இருங்கள் என்கிறார் டாக்டர் கமலா.













