உலக தூக்க நாள் : நிம்மதியான உறக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை

SOCIAL SHARE
Pin It

தூக்கம் தொடர்பான தகவல்களை விவாதிக்கவும், தூக்கத்தைப் பற்றிய தகவல்களை பரப்பவும், பல்வேறு சேவைகளை ஒன்றிணைப்பதற்குமான குறியீடாக ஆண்டில் ஒரு நாள் உலக உறக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. 

உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் உலக உறக்க தினம் அனுசரிக்கப்படும் தேதி மாறுபடும்.  தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்த நாளை அனுசரிப்பதற்கான நோக்கமாகும்.

உலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது.  தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியவை இந்த நாளான்று ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு 14 வது ஆண்டாக உலக தூக்க தினம். இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'வழக்கமான தூக்கம், ஆரோக்கியமான எதிர்காலம்' என்பதாகும். தூக்கத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தூக்கம் பல உடலியல் அமைப்புகளுடன் தொடர்புடையது. தூக்கத்தின் தரமானது, நினைவக ஒருங்கிணைப்பு, வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், ஹார்மோன் ஒழுங்குமுறை, இருதய ஒழுங்குமுறை மற்றும் பல முக்கியமான செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது.

போதிய தூக்கம் இன்மையும், தூங்கினாலும், அது தரமான உறக்கமாக இல்லாவிட்டாலும், அது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  தூக்கம் குறைவாக இருந்தால் அது, அறிவாற்றல் மற்றும் நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பபட்டுள்ளது.
மோசமான தூக்கம் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

 
 

ARUNACHALAM