தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் "இட்லி சேவை" செய்துவரும் தமிழகத்தை சேர்ந்த "இட்லி அம்மா" என செல்லமாக அழைக்கப்படும் கமலாத்தாளின் சேவையை பாராட்டி இணையத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவை போட்டிருந்தார். அவரின் பதிவை அடுத்து "இட்லி அம்மா" நாடு முழுவதும் மிகவும் பிரபலமானார். ஏறக்குறைய அவர் டிவிட்டரில் பதிவு போட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கமலாத்தாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, அவருக்கு சொந்த வீடு கட்டித்தர ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,, "விரைவில் "இட்லி அம்மா" அவர்கள் சொந்தமான ஒரு வீட்டைப் பெறுவார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர், ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு பசியாற வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார். இலாபம் ஈட்டுவதில் அவர் அக்கறை காட்டவில்லை மற்றும் மற்றவர்கள் வயிறார சாப்பிட வேண்டும் என மனதில் கொண்டு தனது சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்" என கமலாத்தாள் ) குறித்து ஆனந்த் மஹிந்திரா புகழ்ந்திருந்தார். இவரின் பதிவை அடுத்து "இட்லி அம்மா" என்ற பெயரில் நாடு முழுவதும் அறியப்பட்டார். மேலும் விறகு அடுப்பில் சமைத்து வந்த "இட்லி அம்மா"வுக்கு கோயமுத்தூர் பாரத் கேஸ் நிறுவனம் இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது.
தனது சேவை பெரிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும். அதற்காக தனது சொந்த இடத்தை கொஞ்சம் பெரிதாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். தற்போது அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்த நிலத்தில் வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.













