நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஆடைகளைக் கழற்றி, விமானப் பணியாளர்களிடம் முத்தம் கேட்டுப் பயணி ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லிக்கும் பெங்களூருக்கும் இடையே தினசரி ஏர் ஏசியா சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல ஏர் ஏசியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது.
அப்போது அதிலிருந்து பயணி ஒருவர், விமானப் பணிப் பெண்ணை அழைத்து தனக்கு முத்தம் வேண்டும், அதுவும் இத்தாலி நாட்டு முத்தம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அவர் மது அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருள் எடுத்துள்ளாரா என்பது குறித்தும் சோதனை செய்யப்பட்டது. உடனடியாக விமான குழுவிடம் மன்னிப்பு கேட்ட அவர் அமைதியாகத் தனது சீட்டில் அமர்ந்து கொண்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து, விமானப் பணிப் பெண் ஒருவர் அவரை செக் செய்ய அவரது இருக்கைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பயணி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற விமானக் குழுவினர் அவரை ஆடைகளை அணியச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் ஆடைகளை உடுத்திக்கொண்டார்.
இது குறித்து விமான நிலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் விமான நிலைய போலீசார் விமானத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது போலீசார் முன்னிலையிலேயே தனது லேப்டாப்பை உடைத்த அந்த நபர், மீண்டும் ஆடைகளைக் கழட்டியுள்ளார். இதனால் போலீசாருக்கும் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. போலீசாரும் விமானக் குழுவும் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவர் ஆடைகளை மீண்டும் போட்டுக்கொண்டார்.
இது குறித்து ஏர் ஏசியா சார்பில் விமான துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு மீண்டும் பறக்கத் தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்க பூரி தெரிவித்துள்ளார். சக பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் விமானத்தில் பயணம் செய்ய 30 நாட்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.