37 நாட்களில் 4 திருமணம்! மூன்று விவாகரத்து!

SOCIAL SHARE
Pin It

திருமணம் செய்வதும், பிறகு சில நாட்களிலே விவாகரத்து செய்வதை கேட்டிருக்கலாம். விவாகாரத்து செய்த கணவனும் மனைவியுமே, மீண்டும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொண்ட கதைகளை கேள்விப்பட்டிருக்கலாம்.  

ஆனால், தனது மனைவியை மூன்று முறை விவாகரத்து செய்த ஒருவர், அதே மனைவியை நான்கு முறை திருமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவத்தை யாரும் கேட்டிருக்க முடியாது! 

அதிசயமும், ஆச்சரியமும் திகைப்பும் நிறைந்த செய்தியாக தோன்றுகிறதா? அந்த அதிசய மனிதர் இவை அனைத்தையும் 37 நாட்களில் செய்திருக்கிறார் என்பது தான் இந்த விஷயத்தில் மற்றுமொரு ஹைலைட்!

இதுபோன்ற வினோதமான மனிதரையோ, நடத்தையோ இதுவரை கேள்விப்படாத ஒன்று. வங்கி ஒன்றில் பணிபுரியும் குமாஸ்தா ஒருவர் ஏப்ரல் 6 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். அதற்காக ஏப்ரல் 7 முதல் 16 வரை எட்டு நாட்கள் விடுப்பு எடுத்தார்.

விடுமுறை ஏப்ரல் 16ஆம் தேதியன்று திருமணத்திற்காக எடுத்த விடுப்பு முடிந்ததும், அடுத்த நாளே அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் அதே நாளில் மீண்டும் விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்துக் கொண்டார். 

பிறகு மீண்டும் திருமணத்திற்காக எட்டு நாட்கள் திருமண விடுப்பு எடுத்துக் கொண்டார். அதன் பிறகு, விடுப்பு முடிந்தவுடன் மீண்டும் ஏப்ரல் 28 அன்று இரண்டாவதாக திருமணம் செய்த முதல் மனைவியை இரண்டாவதாக விவாகரத்து செய்த அந்த மனிதர், அதே நாளில் மூன்றாவது முறையாக பழைய மனைவியையே மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

மே 11 அன்று மூன்றாவது விவாகரத்து செய்துவிட்டு, அடுத்த நாள் அதாவது மே 12 அன்று மூன்று முறை விவாகரத்து செய்த பெண்ணையே நான்காவது முறையாக திருமணம் செய்துக் கொண்டார் இந்த விசித்திர கணவர்.

இவரது இந்த தொடர் திருமண விடுப்பு, அவர் வேலை பார்த்த வங்கிக்கும் சந்தேகத்தை எழுப்பியது. பிறகு நடைபெற்ற விசாரணையில் ஊழியரின் தில்லு முல்லு அம்பலமானது.

எனவே, அவருக்கு ஒரே ஒரு திருமணம், அதிலும் முதல் திருமணத்திற்கான விடுமுறைகளுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது.  

கில்லாடி ஊழியர் பிறகாவது சும்மா இருந்தாரா? வங்கி தனது விடுப்புகளுக்கு முழுத் தொகையையும் செலுத்தவில்லை என்று தைப்பே நகர தொழிலாளர் பணியகத்தில் வங்கி மீது புகார் அளித்தார்.

விடுப்புக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை என்று வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது இந்த விவகாரத்தில் மற்றுமொரு திருப்பம்! அதுவும் வங்கிக்கு  Taipei City Labor Bureau விதித்த அபராதம் 700 அமெரிக்க டாலருக்கு மேல்.

விடுப்பு தொழிலாளர் தரநிலை சட்டத்திற்கு, இந்த வழக்கின் தீர்ப்பு இணங்கவில்லை என்று தைப்பே நகர தொழிலாளர் பணியகத்தின் தீர்ப்புக்கு வங்கி மேல்முறையீடு செய்தது.

நான்கு திருமணமும், மூன்று விவாகரத்தையும் திருமண விடுப்பு எடுப்பதற்காக செய்த மனிதனின் செயல்பாடுகள் நியாயமற்றது என்று தொழிலாளர் பணியகத்தின் தொழிலாளர் தரநிலைப் பிரிவின் ஆணையாளர் ஹுவாங் ஜிங்காங் ஒப்புக் கொண்டார்,

ஆனால், விவாகரத்து செய்த மனைவியையே மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது என்ற விதிமுறை தொழிலாளர் தரச் சட்டத்தில் இல்லை என்று அவர் கூறினார்.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த மனிதரிடம் இருந்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டும் போல!

ARUNACHALAM