வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மனம் தளராமல் போராட பல பிரபலங்கள் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரருமான டுவைன் பிராவோ, கொரோனாவுக்கான ஒரு விழிப்புணர்வு பாடலை பகிர்ந்துள்ளார்.
கொரோனா காலத்தில் மக்களை உற்சாகப்படுத்த அவர் எடுக்கும் முதல் முயற்சி அல்ல இது. கடந்த ஆண்டும், கொரோனா தொற்று பரவியிருந்த சூழலில், பிராவோ மக்களை மனம் தளராமல் இருக்கக்கோரி ஒரு பாடலை உருவாக்கி அதைப் பகிர்ந்தார். தற்போது கொரோனாவின் கோரத் தாண்டவம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பிராவோ மீண்டும் தனது அந்த பாடலை பகிர்ந்துள்ளார்.
IPL-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரில், தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக்கொள்ள உதவ, 'பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு' 50,000 டாலர் நன்கொடை அளிப்பதாக பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். IPL போட்டிகள் தொடர்ந்து நடப்பதை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றும், இந்த கடினமான நேரத்தில் இந்த போட்டிகள் மக்களுக்கு 'சில மணிநேர மகிழ்ச்சியை' அளிக்கின்றன என அரசு நம்புவதாகவும் தான் அறிந்து கொண்டதாக கம்மின்ஸ் தெரிவித்தார்.
கம்மின்சைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீயும் கொரோனா பிடியில் சிக்கியுள்ள மக்களுக்காக, ஆக்ஸிஜன் வாங்க உதவ, 41 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியா தனது இரண்டாவது வீடு என்று தெரிவித்துள்ளார். தான் கிரிக்கெட் விளையாட்டின் உச்சியில் இருந்தபோதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட இந்திய மக்கள் தன் மீது அபார அன்பையும் பாசத்தையும் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.













