ஹார்வர்டு, டொரோன்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைகள் - என்ன பயன்?

SOCIAL SHARE
Pin It

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. 

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பது தொடர்பாக ஹவாய் தீவில் வாழ்ந்து வரும் வைதேகி அம்மையார் என்பவர் தொடர்ந்து பேசி வந்தார்.

இவர் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள `தமிழ் இருக்கை அறக்கட்டளை' என்ற அமைப்பு களமிறங்கியது.

இதற்காக 42 கோடி ரூபாய் வரை தேவைப்படவே, மூன்றாண்டுகளாக இதற்கான முயற்சியில் உலக தமிழர்கள் இறங்கினர். 42 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் டாலர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழ் இருக்கை அறக்கட்டளை, கனடா தமிழ்க்கழகம் ஆகிய இரண்டும் களமிறங்கின.

நன்கொடைகளால் தேவையான நிதி சேர்ந்து விட்டதால் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது. இன்னும் சில நாள்களில் இது குறித்த அறிக்கையினை டொரன்டோ பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது.

`தமிழ் இருக்கைகள் அமைவதனால் என்ன பலன்?'  என தமிழ் இருக்கைகளின் குழு ஆலோசகரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான கோ.பாலச்சந்திரன் கேட்டபோது...

``தமிழ் மொழி மற்றும் தமிழரின் வாழ்வின் பண்பாட்டுப் பழைமையைக் காட்டுவதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன. ஒன்று பழந்தமிழ் இலக்கியம். அடுத்து தமிழர்கள் கடலோடிகளாக வாழ்ந்த வணிகத் திறமை, மூன்றாவது தமிழ் இசை ஆகியவை. இதில், ஹார்வர்டு தமிழ் இருக்கையானது, சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் நோக்கங்களில் ஒன்றாக தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தலைசிறந்த வணிகக் குழுக்களாகத் திகழ்ந்ததற்கான காரணிகளை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ளது.

அதில், தற்போதுள்ள சூழலில் உலக வணிகத்தின் ஒரு பகுதியை ஆள்பவர்களாக மீண்டும் தமிழர்கள் வர முடியுமா எனவும் ஆராய்வது முக்கிய இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரசீகர்கள், சீனர்கள் ஆகியோருக்கு மத்தியில் எப்படி தமிழர்களால் இந்துமகா சமுத்திரத்தை வணிக ஆட்சி நடத்திய மூன்று இனங்களில் ஒன்றாக மிளிர முடிந்தது என்பதை இந்த இருக்கை ஆராயும். அடுத்து, டொரோன்டோ தமிழ் இருக்கையானது, தமிழ் இசையின் பழைமை மற்றும் அதன் சிறப்பு ஆகியவவை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டுமென பல்கலைக்கழகத்துக்குத் தெரிவிக்க இருக்கிறோம்.

இதன்மூலம் பழைமைத் தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாட்டுச் செழுமை தெரிய வரும். இன்றைய தமிழருக்கு அவர்களைப் போல் உயரும் ஊக்கத்தினை அளிக்கும். அதனால் தொடர்ந்து எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்வதற்குத் தமிழர்கள் முயல்வார்கள் என்பது  எண்ணம்" என தெரிவிக்கிறார் பாலச்சந்திரன்.

ARUNACHALAM