ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிக்கல்கள் அதிகரிக்கின்றன. அவருக்கு எதிராக, டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
மல்யுத்த வீரர் சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கும் கடந்த 4ந்தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கிற்கு வெளியே மோதல் ஏற்பட்டுள்ளது. எதிரணியை கடுமையாக தாக்கிய சுஷில் குமாரும், அவரது நண்பர்களும் தப்பிவிட்டனர்.
பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார். அவர் டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். முதலில், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய சுஷில். சண்டையில் ஈடுபட்டவர்களை தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
ஆனால், அதற்கு பிறகு சுஷில் குமார் தலைமறைவானதால், வேறு வழியின்றி டெல்லி காவல்துறையினர் அவருக்கு எதிராக Look-out-Circular வெளியிட்டனர். மோதலில் ஈடுபட்ட பிற பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளையும் டெல்லி காவல்துறை பதிவு செய்தது. அதன்படி, சுஷில் குமாருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது என்று காவல்துறை கூறுகிறது.
சுஷில் குமார் தற்போது ஹரித்வாரில் அமைந்திருக்கும் ஆசிரமம் ஒன்றில் ஒளிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மொபைலில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ மூலம் தாக்குதல் நடத்திய அனைவரின் முகங்களும் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனவே, ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரருக்கான சிக்கல்கள் மேலும் தீவிரமடைகின்றன.













