ஓடிடியில் வெளியாகும் இனம் திரைப்படம்

SOCIAL SHARE
Pin It

1997-ல் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி மல்லி என்ற படத்தை சந்தோஷ் சிவன் இயக்கினார். டெரரிஸ்ட் என்ற பெயரில் அப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 19 வயது நிரம்பிய மல்லி என்ற இளம் பெண் மனித வெடிகுண்டாக மாறி, அரசியல் தலைவரை கொலை செய்ய புறப்படுவது கதை. மனித வெடிகுண்டாக மாறுவது என்று தீர்மானித்த பிறகே மல்லிக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியவரும். உயிரின் விலையை அறிந்து கொள்ளும் மல்லி தனது முடிவை மாற்றினாளா இல்லையா என்பது கதை.

ஈழப்போர் என்பது அசாதாரணமான நெருக்கடி. அந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை, அவர்களின் நியாயங்களை, சராசரி மனிதர்களின் உணர்வுகளுடனும், அறங்களுடனும் ஒப்பிட்டு எடுக்கப்படும் திரைப்படங்கள், பாதிக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை மதிக்கவும், தெரிந்து கொள்ளவும் தவறிவிடுகின்றன. அந்த தவறுதல் தான் மல்லி திரைப்படமும்.

இதுபோன்ற படங்கள் வெளியாகும் போது சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் கிளம்பும். அப்படி 2014 -ல் எதிர்ப்பை சந்தித்த ஈழத்தமிழர் குறித்த திரைப்படம், இனம்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படத்தை லிங்குசாமி விநியோகித்திருந்தார். எதிர்ப்பை மீறி வெளியான படம் ஒரே வாரத்தில் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது.

இனம் திரைப்படத்துக்கு எழுந்த எதிர்ப்புக்கு மல்லியும் ஒரு காரணம். படம் வெளியாகி 7 வருடங்கள் கழிந்த நிலையில் இனம் படத்தை ஓடிடியில் சந்தோஷ் சிவன் வெளியிடுகிறார். படம் எந்த ஓடிடி தளத்தில், எப்போது வெளியாகும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இனத்தில் கருணாஸ், கரண், சரிதா, ஷியாம் சுந்தர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

ARUNACHALAM