சீனாவின் பெயியான் நகரில் நடந்த மாரத்தான் போட்டியின் போது, ஏற்பட்ட ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்று, உறைபனி காரணமாக 21 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பெயியான் நகரில், மஞ்சள்நதி ஸ்டோன் வனப்பகுதி அருகே நேற்று, மாரத்தான் போட்டி நடந்தது. அதில் 172 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்கள் பலர் 21 கி.மீ., தாண்டி சென்றனர். சிலர் 30 கி.மீ., நெருங்கினர். அப்போது திடீரென வானிலை மோசமடைந்தது. உறைபனி விழுந்ததுடன் பலத்த காற்றும் வீசியது. ஆலங்கட்டி மழை பெய்தது. இதில், பல வீரர்கள் சிக்கி கொண்டனர். உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், மாரத்தான் பாதியில் நிறுத்தப்பட்டது. உள்ளூர் மீட்பு படையினர் விரைவாக செயல்பட்டு 18 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், இந்த மோசமான வானிலையில் சிக்கி சம்பவ இடத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மற்றொருவரை காணவில்லை என தகவல் வெளியானது. தொடர்ந்து சில மணி நேரங்களில் அவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.













