ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றாக இருக்கும் நைஜீரியா உலகிலேயே ட்விட்டரை தடை செய்த முதல் நாடாக ஆகியுள்ளது. ட்விட்டரின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அதிருப்தி நிலவி வரும் இந்த நேரத்தில், இது மிகவும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபர் முகம்மது புஹாரி, டிவிட்டர் பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில், பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியா அதிபர் ட்விட்டரில், ‘இன்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பலருக்கு, நைஜீரியாவின் உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் உயிர் இழப்புகள் குறித்த விழிப்புணர்வோ, புரிதலோ இல்லை. 30 மாதங்களாக போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஈடுபப்ட்டு வரும் அதிகாரிகள் பலர், இந்த உள்நாட்டு போரைச் சந்தித்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் தான், பிரிவினைவாதிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பாடம் நடத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள், " என ட்வீட் செய்திருந்தார்.
புஹாரியின் இந்த ட்வீட், சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டிய ட்விட்டர் ‘தவறான நடத்தை' என கூறி, அந்த பதிவை அகற்றியதோடு, அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.
சர்வாதிகார போக்குடன் செயல்படும் ட்விட்டரின் செயல்பாட்டினால் கடுப்பான, நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரி (President Muhammadu Buhari), எங்கள் நாட்டை எப்படி நடத்துவது என்பதற்கு எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை தனது டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளார். தங்கள் நாட்டில் ட்விட்டர் இயங்க காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடக தளமான ட்விட்டர் இந்தியாவிலும் (India) சட்டத்தை பின்பற்றாமல், சர்வாதிகார போக்குடன் செயல்படுவதினால், அதிருப்தியை எதிர்கொள்ளும் நேரத்தில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக உலக அளவில் பார்க்கப்படுகிறது. சமூக ஊடக தளங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் இந்த ஆண்டு மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், ட்விட்டர் வழிகாட்டுதல்களை இன்னும் பின்பற்றவில்லை. இந்திய அரசு ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளுக்கு இணங்காமல் இருப்பதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்ததோடு, ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டது. இந்த விவகாரம் தில்லி உயர் நீதிமன்றத்தை எட்டிய நிலையில், வழக்கு ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.













