எச்-1பி விசா தடை மேலும் 3 மாதத்துக்கு நீட்டிப்பு

SOCIAL SHARE
Pin It

அதிபர் பதவியில் இருந்து வெளியேறி இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், எச்-1பி விசாவுக்கான தடையை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் அதிக அளவில் பயனடைபவர்கள் இந்திய ஐடி ஊழியர்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால், பல அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் அமெரிக்கர்களின் வேலையை உறுதி செய்ய, வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்களுக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

2020ம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை தடை நீடிக்கும் என உத்தரவிட்டார். இது இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விசா மீதான கடந்த 31ம் தேதியுடன் முடிய ஒரு சில மணி நேரங்களே மீதமிருந்த நிலையில், இத்தடையை மேலும் 3 மாதத்திற்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ‘‘கொரோனா பாதிப்புகள் குறையாததால் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என கூறி உள்ளார்.

இதனால் பணி நிமித்தமாக அமெரிக்கா செல்ல எதிர்பார்த்திருக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் 18 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென், எச்-1பி விசா மீதான தடை உள்ளிட்ட குடியேற்ற விவகாரத்தில் டிரம்ப்பின் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக உறுதி அளித்துள்ளார். எனவே, பிடென் பதவியேற்ற பின் தடை நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ARUNACHALAM