தனது செயலி பாதுகாப்பானது என பயனர்களுக்கு ஸ்டேடஸ் வைத்து வாட்ஸ்ஆப் தெரியப்படுத்தி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக, புதிய கொள்கையை, வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிவித்தது. பிப்., 8ம் தேதிக்குள் அந்த கொள்கையை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும், அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு, பல நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு செயலிகளுக்கு, பலர் மாறினர். இதையடுத்து, 'புதிய கொள்கையை அமல்படுத்துவது, மே 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்நிறுவனம் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது. இது அனைத்து பயனர்களும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், ‛உங்களது குறுஞ்செய்தி, இருப்பிடம், உள்ளிட்ட எந்த தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படவோ, வெளியிடப்படவோ மாட்டாது. உங்களின் தொடர்பு எண்களை பேஸ்புக்குடன் பகிர மாட்டோம்,' என ஸ்டேட்டசில் அந்நிறுவனம் வைத்துள்ளது.













