கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள், 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவை பார்வையிட 1,15,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. நிகழ்ச்சி முடியும் வரை மாஸ்க் அணிவது கட்டாயம். கலாசார நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு, விஜய் சவுக்கில் ஆரம்பித்து, தேசிய மைதானத்தில் முடிவடையும். அணிவகுப்பின் நீளமும் 8.2 கி.மீ., தூரத்தில் இருந்து 3.3 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்றவே இந்த ஏற்பாடு. அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதில் 96 பேர் மட்டுமே இடம்பெறுவார்கள்.
அணிவகுப்பு நடக்கும் இடத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். அப்போது கொரோனா அறிகுறி யாருக்கேனும் தென்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்த 8 பூத்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு டாக்டர் மற்றும் மருத்துவ உதவியார் நியமிக்கப்படுவார்கள். அணிவகுப்பு நடக்கும் இடங்களில் தூய்மைபடுத்தப்படுவதுடன், விஐபிக்கள் அமரும் இடங்களில், வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.













