வேதா இல்லம் - பொதுமக்களுக்கு அனுமதியில்லை

SOCIAL SHARE
Pin It

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா  சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் வசித்து வந்தார். 

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 2017ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் தேதி, வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதா மறைந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 28ம் தேதி காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேதா நிலையத்தை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்

இதையடுத்து, வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய கோர்ட் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை அரசு திறக்க தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை. ஆனால் பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

ARUNACHALAM