எந்திரன் கதை விவகாரம் - இயக்குநர் சங்கருக்கு பிடிவாரண்ட்

SOCIAL SHARE
Pin It

எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் டைரக்டர் சங்கருக்கு 'பிடிவாரண்ட்' விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "எந்திரன்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடியது. ஆனால், 1996 ஆம் ஆண்டிலேயே தான் எழுதிய கதையைத் தான் டைரக்டர் ஷங்கர் திருடிவிட்டதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு பதிவு செய்தார்.

ஆரூர் தமிழ்நாடன் "ஜுகிபா" என்ற  பெயரில் எழுதிய கதையை, ‘தித் திக் தீபிகா’ என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு வெளியிட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களும் தனது கதையை திருடிவிட்டார் ஷங்கர் என்று வழக்குத் தொடர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீசுக்கு பதில் வராததால், சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டத்தின் புகார் அளித்த்தார் ஆரூர் நாடான்.

நீண்டகாலமாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கலாநிதிமாறன் மற்றும் டைரக்டர் ஷங்கருக்கு எதிராக எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கிரிமினல் வழக்கு தொடுத்தார். 

வழக்கில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இருவருக்கும் எழும்பூர் 13 ஆவது நீதிமன்றம் 2011-ல்  சம்மன் அனுப்பியது.  அந்த சம்மனுக்கு பதிலளித்த கலாநிதி மாறனும், ஷங்கரும்  கதைத் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்றும், கிரிமினல் வழக்கு செல்லாது என்று உத்தரவிடும்படி கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

அதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்து இருந்தது. எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

விசாரணையில் காப்புரிமை மீறல் இருப்பது தெரிவதால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இயக்குனர் சங்கர் செய்த  மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் கதை திருட்டு வழக்கு 11 வருடங்களுக்குப் பின் மீண்டும் விசாரணை தொடங்கியது. கடந்த 29ஆம் தேதியன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்குத் தொடுத்த ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜராகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்பதோடு, அவர் தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட், திரைப்பட இயக்குநர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். அதோடு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் உத்தரவிட்டார்.

ARUNACHALAM