வங்கி ‘லாக்கர்’ வசதி பெறுவதற்கான விதிமுறைகள் என்ன?

SOCIAL SHARE
Pin It

வங்கி லாக்கர் வசதி, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனவே, புதிதாக லாக்கர் வசதிக்கு விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்ட அந்த கிளையில் லாக்கர் வசதி காலியாக இருந்தால் மட்டுமே அதை பெற முடியும். எனினும், லாக்கர் வசதி கோரி விண்ணப்பிக்கலாம்.

வங்கி கிளையில் உடனடியாக வழங்கப்பட லாக்கர் வசதி இல்லை எனில், அதற்காக விண்ணப்பித்து காத்திருக்கலாம். ரிசர்வ் வங்கி நெறிமுறைகள்படி வங்கிகள், இத்தகைய காத்திருப்பு பட்டியலை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான காத்திருப்பு எண் வழங்கப்படும்.

வங்கி லாக்கர் வசதி பெற்றவர்களில் யாரேனும் அதை விலக்கிக் கொள்ள நேர்ந்தால், காத்திருப்பு பட்டியலின் படி அந்த லாக்கர் ஒதுக்கப்படும். லாக்கர் வசதி பெற, அந்த வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. எனினும், லாக்கர் வசதி பெற, வைப்பு நிதி கணக்கு துவக்க, வங்கிகள் வலியுறுத்தலாம்.

லாக்கர் வசதி பெற, வைப்பு நிதி கணக்கை துவக்கும் படி கூற, ரிசர்வ் வங்கி நெறிமுறைகள் வழி செய்கிறது. பொதுவாக, மூன்றாண்டு லாக்கர் வாடகை மற்றும் பொருந்தக்கூடிய இதர கட்டணத்திற்கு ஏற்ப வைப்பு நிதி தொகை அமையும். இது, ‘செக்யூரிட்டி டெபாசிட்’டாக கருதப்படும்.

லாக்கர் வசதிக்கு வாடகை செலுத்த வேண்டும். இதற்காக துவங்கிய வைப்பு நிதி வட்டியில் இதை பிடித்தம் செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. லாக்கர் வசதியை அடிக்கடி இயக்க வேண்டும், இல்லை எனில், லாக்கரை ரத்து செய்து, அதை திறந்து பார்க்கும் உரிமை வங்கிக்கு உள்ளது.

ARUNACHALAM