டிவிட்டரில் டிரெண்டாகும் தடுப்புச் சுவர்கள்

SOCIAL SHARE
Pin It

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் இதை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிக சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர். மேலும், உடைக்க முடியாத வகையில் சிமென்ட் பயன்படுத்தியும் இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. கூட்டம் கூடி கடந்த முறை நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் போன்று நிகழாமல் இருக்க இந்த நடவடிக்கை அவசியம் தான் என ஒரு சிலர் இதை வரவேற்றாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

''எல்லையில் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அங்கு கூட இப்படி ஒரு பாதுகாப்பு அரண் ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள்''. ''சீனா எல்லையில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. அதை இந்த அரசு தடுக்கவில்லை. ஆனால் உள்நாட்டில் தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர், ''இப்படி ஒரு தடுப்பு சுவர் அருணாச்சல் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்தபோது எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ''எத்தனை பெரிய கோட்டை சுவரே எழுப்பினாலும் சரி, இன்னும் பல வேலிகள் அமைத்தாலும் சரி, விவசாயிகளை ஒருபோதும் ஒடுக்க முடியாது'' என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் #FencingLikeChinaPak என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

ARUNACHALAM