''வெயில் கொளுத்தி வருவதால், சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க, குளிர்ந்த ஆகாரங்கள் உட்கொள்ள வேண்டும்; பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.''
காலை முதல், மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்வோர், குடையை பயன்படுத்தலாம்.
பாலியஸ்டர், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிந்தால், வெயிலில் தாக்கம் உடலை அதிகமாக பாதிக்காது.
தண்ணீர் வசதி இருந்தால், காலை மற்றும் மாலை, இரவு வேளைகளில் குளிப்பது, உடல் ஆரோக்கியத்தை தரும். வெப்ப காலத்தில், வெப்ப பக்கவாதம் என்ற பாதிப்பு வர வாய்ப்புள்ளதால், வயதானவர்கள், குழந்தைகளை வெயிலில் அதிக நேரம் இருக்க வைக்க கூடாது. அவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.
வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் வரும்படி, ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; முந்தைய இரவில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம், காலையில், நீராகாரமாக எடுத்து கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் நீர்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது, உடல் வெப்பத்தை தணிக்கும். வெயிலால், உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால், உப்பு குறைய வாய்ப்புள்ளது.
எலுமிச்சை, மோர் போன்றவற்றில் உப்பு சேர்த்து கொள்ளலாம். மண்பானையில் வைக்கப்படும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொண்டால், உடல் வெப்பம் வெகுவாக குறையும்.
வெயில் காலம் முடியும் வரை, டீ மற்றும் காபி போன்ற சூடான பானங்களை தவிர்த்து, குளிர் பானங்களை அருந்தலாம். எதையும் சூடாக சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது. முடிந்தவரை காரம், மசாலா சார்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது நன்மை தரும்.













