அதிகரிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்

SOCIAL SHARE
Pin It

எல்லா நேரமும், மொபைல் போன், லேப் டாப், கம்ப்யூட்டர் என்று பார்ப்பதால், கண்களை இமைப்பது மறந்தே போய்விட்டது அல்லது குறைந்து விட்டது. விளைவு, 'டிரை - ஐ' எனப்படும் உலர் கண்கள் பிரச்னை. 'ஸ்கிரீன் டைம்' அதிகரித்து இருப்பதால், உலர் கண்கள் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், 5 மடங்கு அதிகரித்து உள்ளது. இதை, 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்று சொல்வோம். கண்களில் சுரக்கும் இயல்பான நீர் வற்றி, கண்கள் வறட்சியாகி விடுகிறது.

கண்கள் உலர்ந்ததை வெளிப்படுத்தும் விதமாக, எதிர்பாராத நேரத்தில், கண்களில் இருந்து நீர் வழியும். கண்களின் உள்ளே, மணலை போட்டது போன்று உறுத்துவது, அரிப்பு, கண்கள் சிவந்து போவது... இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கும் அதிகமான அறிகுறிகளோ வரலாம். தொடர்ந்து பார்க்க முடியாமல், துாக்கம் வரும் உணர்வு, அயர்ச்சி இருக்கும்.

தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் போன் பார்ப்பதால், கருவிழிக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காது; இதனாலேயே எரிச்சல் ஏற்பட்டு, கண்கள் வறட்சியாகி விடுகிறது. கருவிழியில் ரத்தக் குழாய் கிடையாது; எனவே, ரத்த ஓட்டம் இருக்காது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாகவே செல்லும். கண் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் வழியாகவே, கண்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் கண்ணை இமைக்கும் போது, சுரப்பிகள் சுரக்கும் நீர், கருவிழியில் படரும். நிமிடத்திற்கு, 20 முறை இமைக்கும் போது, நீரில் இருந்து ஆக்சிஜனை கருவிழி எடுத்துக் கொள்ளும்.நிமிடத்திற்கு, 20 முறை கண் இமைக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து, 20 நிமிடங்கள் கம்ப்யூட்டர் பார்த்தால், 20 வினாடிகள் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை அழுத்தலாம். மேலும், 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி துாரத்தில் உள்ள பொருளை, 20 வினாடிகள் பார்க்கலாம்; இதனால், கண் தசைகள், 'ரிலாக்ஸ்' ஆகும்.

 

ARUNACHALAM