ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் உடைய பயணிகளை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வைரஸ் தாக்கம் உடையவர்களை முகர்ந்து பார்த்து அவர்களது சுவாசக்காற்றை வைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா, இல்லையா என்று பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களால் கண்டறிய முடியும் என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் முன்னதாக உறுதிபட தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இதுகுறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு 'பிளஸ் ஒன்' என்கிற விஞ்ஞான இதழில் பிரசுரிக்கப்பட்டது. பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய நாய்களுக்கு எளிதில் பயிற்சி அளிக்க முடியும், இவை 96 சதவீதம் துல்லியத்துடன் வைரஸ் தாக்கம் ஒரு மனிதனின் உடலில் உள்ளதா, இல்லையா என்று தனது மோப்ப சக்தி மூலம் கண்டறியும். உலகம் முழுவதும் நாய்களை இதற்காகப் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களது சுவாசத்துக்கும் செலுத்தப்படாதவர்களது சுவாசத்துக்கும் நாய்களுக்கு வித்தியாசம் தெரியும். இதனை கண்டறிவதற்காக தடுப்பு மருந்து வாசனை தடவப்பட்ட டீசர்ட் மற்றும் சாதாரண டீசர்ட் ஆகியவை ஒரு இரவு முழுவதும் நாய்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட டீ சர்ட்டை நாய்கள் சரியாக எடுத்து வந்துள்ளன.
வைரஸ் தாக்கம் இல்லாதவர்களுக்கு சுவாசத்தில் வித்தியாசமான வாசம் வீசும். அதேசமயம் வைரஸ் தாக்கம் உள்ளவர்களது சுவாசக் காற்றில்வேறு விதமான வாசம் வீசும். இதனை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் எளிதில் கண்டறியும் என இந்த ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.













