இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) உடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி விரைவில் ட்ரோன்களால் மூலம் விநியோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் COVID-19 தடுப்பூசி வரும் மே 1 முதல் இந்தியா முழுவதும் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆய்வுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்தன. கான்பூரில் உள்ள ICMR மற்றும் IIT, 2021 ஆளில்லா விமான அமைப்பு விதிகளிலிருந்து, ஆய்வுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலக்கு ஒரு வருட காலத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தடுப்பூசியை வழங்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசியை தேவைப்படுபவர்களுக்கு விரைவாக கிடைக்கச் செய்யலாம்.
இருப்பினும், தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் சாத்தியக்கூறுகளைப் பொறுத்து, இதனை செயல்படுத்த சிறிது காலம் ஆகக்கூடும்.
COVID-19 தடுப்பூசி விநியோகத்திற்கான ட்ரோன்களை பெங்களூரை தளமாகக் கொண்ட சிடிஸ்பேஸ் ரோபாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (CDSpace Robotics Pvt Ltd.) மற்றும் பாரத் பயோடெக் (Bharat Biotech) இணைந்து உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனை விலக்கு MoCA வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், ரயில் விபத்து நடந்த இடங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கும், ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பு பராமரிப்பதற்கும், மேற்கு மத்திய ரயில்வேக்கு (WCR) நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டது.













