இந்தியர்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்துவதே நீண்டகால தீர்வு என அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் நீண்டகாலத் தீர்வு என அந்தோனி பவுசி கூறியுள்ளார். உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன, அதை வைத்து தயாரிக்க வேண்டும். உள்நாட்டு அளவில் மட்டும் தடுப்பூசி தயாரிக்க முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். இந்தியா விரைவாக தொற்றிலிருந்து மீள வேண்டும் என்ற அவசியம் காரணமாகவே மற்ற நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்து வருகின்றன.
தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்கலாம். ஆக்சிஜன் சப்ளை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாவிட்டால், மிகவும் கொடுமையானது. அதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவுக்கு தற்போது உடனடியாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், பிபிஇ ஆடைகள், மருந்துகள் உள்ளிட்டவை அவசியம் என அந்தோனி பவுசி கூறினார்.













