இசைக்கருவியாக பயன்படும் நீர்க்காய்

SOCIAL SHARE
Pin It

சுரைக்காய் ஒரு காய் என்று தெரியும். இது உண்ணும் காயாக மட்டுமல்ல, நீரை சேமித்து வைக்கும் கலனாகவும் பயன்படுத்தப்பட்டது.

சுரைக்காயின் உள்ளிருக்கும் சதைப் பகுதிகளை அகற்றிவிட்டு, காயை காய வைத்தால், அது குடுவையாக மாறிவிடும். அதில் நீர் சேமித்து வைப்பார்கள். பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் கூஜா போல இருக்கும் சுரைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் Water Bottle பெயர் சுரைக்காய் குடுவை.
 
கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது.

முற்றின காய்ந்த சுரைக்காய், இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் உள்ளது.

விலையில் மலிவான சுரைக்காய், ஊட்டச்சத்துக்களில் மிகவும் சிறந்தது. உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காய்.  

சிறுநீரை நன்றாக பிரித்து, சிறுநீரக நோய்கல் ஏற்படாமல் காக்கிறது சுரைக்காய். எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக கோளாறுகள் சரியாகும்.

உடல் பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் ரத்தசோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.  

இத்தனை நன்மைகளைக் கொண்டுள்ள சுரைக்காயை சமைக்காமல் பச்சையாக உண்டால், வயிறும், குடலும் பாதிக்கப்படும். 

ARUNACHALAM