தமிழக அரசின் இலவச ஆட்டு கொட்டகை திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

SOCIAL SHARE
Pin It

கிராமங்களைப் பொருத்தவரை, விவசாயம் கைகொடுக்காத நேரத்தில், ஆடு வளர்ப்பு அதிகளவில் பலன் தருகிறது. பொருளதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆடு வளர்ப்பை முன்னெடுக்கும்பட்சத்தில், அவர்களது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இலவச ஆட்டுக் கொட்டகை அமைத்துத் தருகிறது.

இத்திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்டுக்கொட்டகையைப் பெற விரும்புவோர், ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இத்திட்டத்தில் பயன்பெற சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ, ஆடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும். அங்கு அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தில் உங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தகுதி (Qualification)

  • ஏற்கனவே ஆடு வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • அதே நேரத்தில் ஆடு வளர்க்க ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • சொந்தமாக நிலம் வேண்டும்

  • நிலத்திற்கான பட்டா

  • கம்பூட்டர் சிட்டா

  • அடங்கல்

  • ஆதார் அட்டை

  • வாக்காளர் அடையாள அட்டை


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விவசாயிகளிடம் இருந்து கால்நடை துறையினர் வாங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர், அந்த விண்ணப்பங்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பங்களுடன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு, விண்ணப்பித்த விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கால்நடைகள் வளர்த்து வருகிறார்களா, வீட்டருகே கொட்டகை அமைக்க போதிய சொந்த நிலம் உள்ளதா? என, ஆய்வு செய்யும். பின்னர், தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து, திட்ட அலுவலர் மூலம், ஆட்சியருக்கு அனுப்பி, நிர்வாக அனுமதி பெறப்படும்.

கொட்டகை அமைக்கும் பணியில், நுாறு நாள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். கொட்டகை அமைக்கும் பணியை, வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையிடுவார். பணிகள் முடிந்தபின், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கொட்டகை ஒப்படைக்கப்படும். விண்ணப்பித்த ஓரிரு மாதங்களிலேயேக் கொட்டகை அமைத்துத் தரப்படும்.

கொட்டகையை அதிகாரிகள் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். அப்போது இந்தக் கொட்டகை வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

ARUNACHALAM