வங்கி கணக்குடன் ஆதார் இணைத்திருந்தால் ரூ. 5000 பெறலாம்!

SOCIAL SHARE
Pin It

நாட்டிலுள்ள விவசாயிகள் உட்பட அனைத்து ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடியால் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய - மாநில அரசுகளின் மானிய நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கும் கிஷான் கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

ஓவர் டிராஃப்ட் முறையில் ரூ.5000!

இந்த ஜன் தன் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றால் கூட நீங்கள் ரூ.5,000 வரையில் ஓவர் டிராஃப்ட் (Overdraft) முறையில் பணம் எடுக்க முடியும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியை உங்களால் பெற முடியும்.

முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை சரியாக கடைபிடிக்க வேண்டும்

இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கியிருக்க வேண்டும்.

அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாருக்கு இந்த ஜன் தன் வங்கிக் கணக்கு? - Who is Eligible for Jan dhan account

10 வயது குழந்தைக்குக் கூட இத்திட்டத்தின் கீழ் எளிதாக வங்கிக் கணக்கு திறக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறப்பதற்கு ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். உங்களுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் மிகச் சுலபமாக இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கி பயன்பெற முடியும்.

சமீபகாலமாக, எரிவாயு மானியம், குடும்ப உறுப்பினர் அட்டை மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய-மாநில அரசு நலத்திட்ட உதவிகள் நேரடியாகவே இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இடைத்தரகர்களின் மோசடி, முறைகேடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM