பண்பு வளர்த்த பண்டைய தமிழ் கலாச்சாரம்!

SOCIAL SHARE
Pin It

தமிழர்களின் பண்பாடு என்பது விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. வந்தாரை வாழ வைக்கும் குணம் கொண்ட மக்கள் தமிழ் மக்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கே இதற்குச் சான்றாகும்.

அன்ன சத்திரங்கள்

அக்காலத்தில் அரசர்கள், ஜமீன்தார்கள் மட்டுமல்ல, பெரும் நிலக்கிழார்களும் சாலைகளை ஒட்டி அன்னச்சத்திரம் என்று ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். அரசர்களை புலவர்கள் புகழும்போது, அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டிய வள்ளல் என்றுதான் புகழ்வார்கள். மதுரையை ஆண்ட நாயக்கர் வமிசத்தில் வந்த அரசியான இராணி மங்கம்மாள் கட்டிய சத்திரங்கள் பல இன்னும் மங்கம்மாள் சத்திரம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகின்றன.

பேருந்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், மாட்டுவண்டிகளே நீண்ட தொலைவு பயணத்திற்கு பயன்படும் வாகனங்களாக இருந்தன.

அப்படி வெகு தொலைவிலிருந்து வரும் வண்டி மாடுகளும், அதில் பயணிக்கும் வியாபாரிகளும், மக்களும் இந்தச் சத்திரத்தில் இரவு வேளையிலும், மழை நேரத்திலும் தங்கிச் செல்வார்கள். இரவு வேளையில் படுப்பதோடு, பசிபோக்க உணவும் தரப்படும், குளித்து சுத்தமாகி அடுத்தநாள் கிளம்புவதற்கு குளிப்பதற்கான கிணறு தொட்டி வசதிகளும் உண்டு. மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்கு தாகத்திற்கு அருந்த நீர்த் தொட்டிகளும், அவற்றின் பசிபோக்க, வைக்கோலும் குவித்து வைத்திருப்பார்கள்..

நாம் மேற்கத்திய கௌபாய் திரைப்படங்களை பார்த்திருப்போம், குதிரையில் வருபவர்கள் விடுதிகளுக்குச் செல்லுமுன், விடுதியில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாணர்கள் அவர்களின¢ குதிரைகளை கொண்டு சென்று லாயத்தில் கட்டி, அவற்றிற்கு புற்களையும் போடுவார்கள்.

இப்படி தமிழகத்தில் பல சத்திரங்களும் குடிநீர் தொட்டிகளும் சேவைகளுக்காகவே கட்டப்பட்டிருந்தன.

திண்ணைக் கலாச்சாரம்

தமிழகத்தில் அக்காலத்தில் அனைத்து வீடுகளிலும் வெளிப்புறம் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும், திண்ணையின் ஒரு ஓரமாக மணல் கொட்டி, அதன்மேல் மண்பானையில் நீர் வைத்திருப்பார்கள். மேலே மூடியிட்டு அதன் மேல் குவளையும் வைத்திருப்பார்கள். வழிபோக்கர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கும், அமர்ந்து களைப்பாறுவதற்கும் இத்திண்ணைகள் உதவின. இரவு நேரத்தில் படுத்துச் செல்பவர்களும் உண்டு.

பகல் வேளைகளில் அத்தெருவில் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுக்களை விளையாடவும் இத்திண்ணை பயன்பட்டு வந்தது.

திருவிழாக்காலங்களில், வெளியூர்களிலிருந்து வருபவர்கள், ஊர்ச் சத்திரத்தில் இடம் இல்லையென்றால், இப்படித் திண்ணையில்தான் தங்குவார்கள். பல வீடுகளில் அவர்களை விருந்தினர்களாக உபசரித்து உணவும் தருவார்கள். திருவிழா முடிந்தபின் அவர்கள் அந்த வீ ட்டினருக்கு நன்றி செலுத்தி விடைபெற்றுச் செல்வார்கள். திருவிழா சமயங்களில் பெரும்பாலும் எல்லா கிராமத்து வீடுகளிலும் அடுத்தவர்களுக்காக சேர்த்து சமைப்பதும், பகல் வேலைகளில்

தாகம் தணிப்பதற்காக இஞ்சி தட்டிப்போட்டு, கருவேப்பிலை கடுகு போட்டு தாளித்த மோர் பானைகளை திண்ணைகளில் வைக்கும் பழக்கமும் இருந்தது.

பத்துகேவ்ஸ் முருகன் கோயில் அடிவாரத்தில் இன்றும் தேநீர், நீர் மோர், அன்னதானம் போன்ற உபசரிப்புகளைக் காணமுடிகிறது. இதுபோல தமிழகத்திலும் திருவிழாக் காலங்களில் மட்டும் அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் வைக்கிறார்கள். சமய சங்கங்கள், சில குழுக்கள் இச்சேவையில் ஈடுபடுகின்றன. சேவை மனப்பாங்கு மாறிப் போய், பெருமைக்காக சில சாதிக் குழுக்களும் தங்கள் சாதிப்பெயர் கட்டிய பதாதைகளோடு நீர்மோர் பந்தல்களை அமைக்கின்றனர்

தனிப்பட்ட முறையில் விருந்தோம்பல் பண்பு தமிழர்களிடம் இன்று குறைந்து விட்டது. திண்ணைக் கலாச்சாரம் மறந்து விட்டது. வீட்டின் அருகே புதிதாக ஆள் நின்றிருந்தாலும், இவன் எதற்கு இங்கு நிற்கிறான் என்று சந்தேகப்படும் நிலைதான் இன்று நிலவுகிறது.

சாணம் தெளிப்பதும்,

கோலம் போடுவதும்.

கிராமங்களில் மட்டுமல்ல அக்காலத்தில் நகரங்களிலும் இப்பழக்கம் இருந்து வந்தது. இன்று நகரங்களில் இப்பழக்கம் முற்றிலுமாக மறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வாசலில் சாணி தெளித்து கோலம்போட்டு, சாணத்தைப் பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப்பூவை. சொருகி வைத்திருப்பதை பேருந்தில் பயணிக்கும்போது பார்க்க முடிகிறது. எல்லா வீடுகளிலும் இதைப் பார்க்க முடிவதில்லை, சில வீடுகளில் குறிப்பாக விவசாயிகளின் வீடுகளில் இப்பழக்கத்தை கடைபிடித்து வருவதைக் காண முடிகிறது.

பெரும்பாலும் பல வீடுகளில் இப்போது வாசல் தெளிப்பதில்லை. இருப்பினும் இன்று மார்கழி மாதம் மற்றும் பொங்கல் காலத்தில் அனைத்து வீடுகளில் கோலம் போடுகின்றனர். பல இடங்களில் கோலப்போட்டிகளும் கூட நடைபெறுகின்றன. இது ஒரு நாகரீக போக்காக (திணீsலீவீஷீஸீ tக்ஷீமீஸீபீ) கடைப்பிடிக்கப்படுகிறது.

சரி சாணம் தெளித்துக் கோலம் போடுவதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?

முதலில் சாணம் ஒரு கிருமி நாசினினியாகச் செயல்படுகிறது. பகல்வேளையில் தெருவில் பலர் நடந்திருக்கலாம். தூசுகளும் இருக்கும், இதன் வழி கிருமிகள் பரவும் ஆபத்தும் இருக்கிறது. நீர் தெளிப்பதினால் புழுதி அடங்குகிறது. இரண்டாவதாக சாணம் காற்றிலிருக்கும் கிருமிகளையும் சாகடிக்கிறது. அக்காலத்தில் குடிசை வீட்டில் வசிப்பவர்கள் எல்லோரும் வீட்டிற்குள் மண்தரையை மட்டுமே பயன்படுத்தினர். கல்காரை கிடையாது. சாணத்தினை பூசி மெழுகி வைத்திருப்பார்கள். ஒன்று இடம் சுத்தமாக இருப்பது மட்டுமல்லாமல், சாணத்தின் மணத்தினால் வீட்டிற்குள¢ விஷ ஜந்துக்களும் நுழையாமல் இருக்கும். இந்த சாணம் குளிர்கால தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கவும் செய்கிறது.

ஆடுமாடுகளுக்கு ஆறாத புண்கள் இருந்தால் இந்த பசுஞ்சாணத்தை சுட்டு அதன் மேல் பூசுவதும் உண்டு. ஒரிரு நாட்கள் கழித்து அதைக் கழுவி விட்டு, நல்லெண்ணெயில் மஞ்சள் தூள் கலந்து பூசுவார்கள். புண்கள் குணமாகி விடும். புண்ணில் புழுக்கள் இருந்தாலும் இறந்து போய்விடும். எனவே சாணத்தில் கிருமிகளை அழிக்கும் குணம் உண்டு என்பதை அறிய முடிகிறது.

கோலம் போடுவதன் நோக்கம் சிற்றெறும்புகள், சிட்டுக் குருவிகள் போன்ற சிறு உயிர்களுக்கு உணவளிக்கும் சேவைதான். கோலமாவு அரிசி மாவினால் செய்யப்படுகிறது.

அடுத்து முகத்திற்கு பொட்டு வைப்பது போல கோலமானது வீட்டிற்கு மங்கலமான ஒர் அழகைக் கொடுக்கிறது. இல்லத்திற்கு மகாலக்ஷ்மியை ஈர்க்கிறது என்றும் சொல்கிறார்கள். மாலை வேளைகளில் வீட்டிற்கு விளக்கேற்றுவது மகாலக்ஷ்மியை வரவேற்க என்பதைப் போல் கோலம் போடுவதும் வீட்டிற்கு தெய்வீக சக்திகளை ஈர்ப்பதற்கே என்று வட இந்திய மக்களும் நம்புகின்றனர்.

மொத்தத்தில் கோலம் என்பது மங்கலத்தை உண்டாக்கும் அம்சமாகும்.

ARUNACHALAM