ஒரு வயதுள்ள குழந்தைக்கு சோறுாட்ட எங்கு செல்லலாம் என பெற்றோர் ஆலோசிப்பர். அவர்கள் ஒரேமனதாக செல்ல வேண்டிய திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் கைலாச நாதர் கோயில்.
ஏனெனில் சந்திர தலமான இங்கு 'மனோகாரகர்' எனப்படும் சந்திரனை தரிசித்தால் உடல்நலத்துடன், மனபலமும் அதிகரிக்கும். அப்பூதியடிகள் என்னும் சிவபக்தர், மனைவி அருள்மொழியுடன் திங்களூரில் வசித்தார். இவர்கள் சிவனடியாரான திருநாவுக்கரசரை நேரில் சந்திக்காவிட்டாலும் அவரை மானசீக குருவாக ஏற்று வாழ்ந்தனர்.
தங்களின் இரு மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் வைத்திருந்தனர். திருநாவுக்கரசரின் பெயரில் பள்ளிக்கூடம், தர்மச்சத்திரம், தண்ணீர்ப்பந்தல் நடத்தி வந்தனர்.
ஒருமுறை திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்திருந்தார். அதைக் கேள்விப்பட்ட அப்பூதியடிகள் தங்களின் வீட்டில் தங்கவும், உணவளிக்கவும் ஏற்பாடு செய்தார். ஒருநாள் மதியம் உணவு தயாரானதும் தன் மகனான மூத்த திருநாவுக்கரசை வாழை இலை அறுத்து வர தோட்டத்திற்கு அனுப்பினார் அப்பூதியடிகள். அங்கு கருநாகம் தீண்டியதால் அவன் இறந்தான். இதை கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் இறந்த உடலுடன் கைலாசநாதரின் சன்னதிக்கு ஓடி வந்தார்.
சிவன் மீது 'ஒன்று கொலாம்' எனத் தொடங்கும் திங்களூர் பதிகத்தை பாடினார். சிவனருளால் துாங்கி எழுவதைப் போல மூத்த திருநாவுக்கரசு உயிர் பிழைத்தான். திங்கட்கிழமையன்று இந்த பதிகத்தை பாடினால் விஷ பயம் நீங்கும். மனபலம் அதிகரிக்கும்.
குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதை 'அன்னப் பிரசானம்' என்பர். அசுவினி, மிருகசிரீடம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திர ஹோரை நேரத்திலும், திங்கள் கிழமைகளில் இந்தக் கோயிலில் சோறுாட்டுவதை நடத்துவது சிறப்பு. முதலில் சந்திரன், பசுமாட்டை குழந்தைக்கு காட்டிய பின் வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சோற்றை ஊட்டுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஜல தேவதையின் அருளும், அவ்ஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைக்கும். ஜலதேவதையின் அருளால் ஜலதோஷம், காய்ச்சல் அண்டாது. அவ்ஷதி (மருந்து) தேவதையின் அருளால் நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக நீங்கும்.
பிறந்த ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமியன்று கைலாசநாதருக்கு வில்வமாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிரதோஷ விரதமிருந்து கைலாச நாதரை தரிசிக்கின்றனர். இக்கோயிலில் திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், அருள்மொழி, மூத்த, இளைய திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.













