கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக பானம்

SOCIAL SHARE
Pin It

பல்வேறு உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை. 

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக மதுபானம் வழங்குகிறது ஒரு பார். இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகை 90 லட்சம். இதில் 43 விழுக்காட்டினருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டும் போடப்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை குறையலாம் என சுகாதார துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில், ஊரடங்கு தளர்வுகளை முழுமையாக விலக்க தடுப்பூசி போடும் பணிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

கொரோனா காலகட்டத்தில் மது பார்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள ஜெனியா பார் அரசுடன் கூட்டணி அமைத்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பானங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனடியாக மது அருந்தக்கூடாது என்பதால் மது சாராத பானங்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சில வாரங்களுக்கு முன் துபாயிலும் ஒரு சலுகை அறிவிக்கப்பட்டது. அதில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பில்லில் சலுகை வழங்கப்படும் என துபாயை சேர்ந்த உணவகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM