இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
ஹாரி - மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் - மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மார்ச் 7ஆம் தேதி வெளியாகிறது.
ஹாரி - மேகன் மார்கலின் நேர்காணல் குறித்த வீடியோ தொகுப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
“எனது மிகப்பெரிய கவலையான வரலாறு திரும்பியது. எங்கள் இருவருக்கும் இது மிகக் கடினம். நான் எனது மனைவியின் அருகில் அமர்ந்து பேசுவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு எனது மனைவி உள்ளார். நாங்களாவது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறோம். எனது தாயார் அவர் வாழ்நாளில் அவர் சந்தித்த பிரச்சினைகளை தனியாகக் கடந்து வந்ததை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றார்.













