வாகன விதி மீறல் - தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்

SOCIAL SHARE
Pin It

ஹெல்மெட் அணியாமல் செல்வது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

குறைந்தபட்சம் அபராத தொகையாக ரூ.500-ஐ வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டி உள்ளது. அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை செலுத்தும் நிலைக்கும் வாகன ஓட்டிகள் தள்ளப்படுகிறார்கள். இதனால் பெங்களூரு நகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி கொண்டால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலி சங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் ஒரு பெண் கொடுத்து சென்ற சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா உலோஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரதி விபூதி, ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். தனது கணவருடன் பெலகாவி டவுனில் உள்ள சந்தைக்கு ஸ்கூட்டரில் காய்கறி வாங்க பாரதி சென்றார். பாரதியின் கணவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனால் பாரதி ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார், ஸ்கூட்டரை மறித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.500-ஐ அபராதமாக விதித்தனர். ஆனால் பாரதி தன்னிடம் ரூ.500 இல்லை என்று கூறினார். மேலும் தெரியாமல் ஹெல்மெட் அணியாமல் வந்து விட்டதாகவும், இந்த ஒரு முறை தங்களை விட்டுவிடும்படியும் பாரதியும், அவரது கணவரும் போக்குவரத்து போலீசாரிடம் மன்றாடி உள்ளனர்.

அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் செலுத்தினால் தான் விடுவோம் என்று பிடிவாதமாக கூறியுள்ளனர். இதனால் தான் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பாரதி கழற்றி, போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் தாலி சங்கிலியை விற்று அபராத தொகையை எடுத்து கொள்ளும்படி கூறிவிட்டு பாரதி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த காட்சிகளை அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் போக்குவரத்து போலீசாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ARUNACHALAM