தற்கொலை செய்து கொள்ள வழி சொல்லும் கூகுள் - வலுக்கும் எதிர்ப்பு

SOCIAL SHARE
Pin It

எந்த சந்தேகத்துக்கும் விடையளிக்கும், 'கூகுள்' தற்போது தற்கொலைக்கும் வழிகாட்டுகிறது; தற்கொலை நுட்பங்கள் குறித்த உள்ளடக்கத்தை வழங்கி ஆபத்தான வழியையும் காட்டுகிறது. பெரும்பாலும், தற்கொலை செய்துக்கொள்பவர்கள் அல்லது தற்கொலை செய்ய முயற்சிப்போர் உபயோகிக்கும் கருவிகளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி, உயிரை மாய்த்துக்கொள்வது எப்படி, வலியின்றி தற்கொலை செய்துகொள்வதெப்படி, தற்கொலை முறைகள் போன்ற, 'கூகுள்' தேடல்களைக் காணலாம்.

சிலர் கூகுளை, 'குரு' என்று போற்றுகின்றனர். அறிவு பகிர்வு தளமாக இருந்தாலும், சட்டவிரோதமான, விதிமுறைக்குப் புறம்பான அறிவைப் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று, சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூகுள் வாழ்க்கையின் ஒரு பகுதி; அதை தடுக்க எந்த வழியும் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், அரசு மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழுவான, 'சி.இ.ஆர்.டி., - இன்' ஆகியவை, இதேபோன்ற கருத்துடன் விலகிச் செல்ல முடியாது என ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். முழுவதுமாக அகற்றாவிட்டாலும், விஷயங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சட்டங்களின்படி, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். தற்கொலைக்கான வழிகளைத் தேடும்போதெல்லாம், கூகுள் உடனடியாக ஒரு வெற்றுத் திரையைக் காண்பிக்க வேண்டும். 'இந்திய தகவல் தொழில்நுட்பச்சட்டங்களின்படி, இத்தேடலுக்கு விடை அளிக்க முடியாது' என்று அறிவுறுத்தவேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

'நகர்புறத்தில்உள்ளவர்கள் தான் அதிகமாக, கூகுள் இயங்குதளத்தில் இதுபோன்ற தேடுதலில் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, ஒரு தற்கொலை நிகழும்போது, அது தற்கொலை என முடிவாகும் வரை, கொலை என்றே கருதப்படுகிறது. அதனால், அவர்களின் மின்னணு கருவிகள் முழுமையாக ஆராயப்படுகின்றன. பொதுவாக, தற்கொலைக்கு முன்கூட்டியே திட்டமிட்டவர்கள், அதற்கான வழிகளை தேடுவதற்கு கூகுளை நாடுவது கண்டறியப்படுகிறது. அதனால், தற்கொலை குறித்த தேடுதல் உள்ளடக்கத்தை அகற்றுவதில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்' என சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

''உணர்ச்சிபூர்வமாக திடீர் முடிவை எடுப்பவர்கள், கூகுளை நாடுவதில்லை. ஆனால், திட்டமிட்டு செயல்படுபவர்கள், உறுதியாக இல்லாதவர்கள் பல மாதங்களாகத் திட்டமிடுபவர்கள், கூகுளை ஆராய முனைகின்றனர் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ''ஒருவர் தற்கொலைக்குத் தேடும் தருணத்தில், முதல் தேடல் முடிவாக கூகுள் ஒரு தற்கொலை 'ஹெல்ப்லைன்' தந்தாலும், பலர் அதை உபயோகிப்பதில்லை. ஒரு நபர் மனச் சோர்வடைந்தால், அவர் எப்போதாவது தான், ஹெல்ப்லைனை அழைப்பார். ஆனால், அந்த ஆலோசனைகள் ஒரே மாதிரி சலிப்பூட்டும் விதத்தில் இருக்கும்; பிரச்னைகளுக்கு ஏற்றவாறு இருக்காது. ''பயிற்சி அளிக்கப்பட்ட ஆலோசகர்களுடன், அனைவரும் நினைவில் கொள்ளும் அளவுக்கு, 'ஹெல்ப்லைன்' இருப்பதை அரசு உறுதிசெய்வது முக்கியம்,'' என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ARUNACHALAM