ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் உள்ள ரயில்வே பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மண்டபம் மற்றும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு ஆகியவற்றை இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்படுவதற்கு முன்புவரையில் மண்டபத்துக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் இணைப்பை வழங்கிய ஒரே பாலமாகவும் இது இருந்தது.
பழைய பாலத்தின் அடியில் படகுகள் செல்லும் வகையில் மடிப்புகளும் இருந்தன. சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இந்தப் பாலம் இருந்தது. தற்போது வரையில் எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை என்பதும் இதன் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள ஹெர்சர் தூக்குப் பாலம், அண்மைக்காலமாக வலுவை இழந்துவிட்டது. இதன் காரணமாக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, பாம்பன் கடலின் மீது இருவழிப் பாதையைக் கொண்ட ரயில் பாலம் அமைப்பது என மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கான செலவு 250 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இதன் திட்ட மதிப்பீடு 450 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய பாலத்துக்கான பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், புதிய ரயில் பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்துக்கும் பாம்பன் மீனவர்களுக்கும் இடையேயான உரசல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்நிறுவனம் பாலம் கட்டுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானப் பொருள்களைத் தரமில்லாமல் பயன்படுத்தியதாலும், கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் மூன்று முறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
பாம்பன் வடக்கு கடற்கரையில் உள்ள கடற்கரை மணலை அள்ளி கட்டுமானத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதை மீனவர்கள் பலமுறை தடுத்தும் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த மாதம் பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடற்கரையில் மண்ணை அள்ளியுள்ளனர். கிட்டத்தட்ட 7 டிப்பர் லாரிகளில் மணல் எடுத்துள்ளனர். இதுகுறித்து பாம்பன் காவல்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காவல்நிலையத்தில் ஆஜராகி, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக எழுதிக்கொடுத்தனர்" என்கின்றனர் மீனவர்கள்.













