சாம்சங்கின் எதிர்காலம் என்ன ஆகும்? துணை தலைவருக்கு 2.5 ஆண்டு சிறை!

SOCIAL SHARE
Pin It

அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தென்கொரியாவின் டெங்கோ பகுதியில் லி நுங் செல் என்பவர் சாம்சங் நிறுவனத்தை துவங்கினார். ஆரம்பத்தில் டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழிலாக இருந்த சாம்சங் குழுமம் அடுத்த 60 ஆண்டுகளில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து உலகையே கலக்கியது. ஆப்பிளுக்கு நிகராக சாம்சங் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு மூன்று தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. லியின் மகன் லி கொன் ஹி 1987-இல் சாம்சங் தலைவராகப் பொறுப்பேற்றார். 2008 வரை அவர் தலைவர் பதவியில் நீடித்தார். அந்த காலகட்டத்தில் டிவி, சாம்சங் வீடியோ பிளேயர், ஆடியோ சவுண்ட் சிஸ்டம், செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் விற்பனையில் சாதிக்கத் துவங்கியது சாம்சங்.

2009, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுத்துக்கொண்ட லீ, பின்னர் 2011 முதல் 2020ல் தனது மறைவு வரை தலைவர் பதவியில் நீடித்தார். தந்தையின் மறைவை அடுத்து மூன்றாவது தலைமுறையாக அவரது மகன் ஜே ஒய் லீ துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். தாத்தா மற்றும் அப்பா போல இவரும் சாம்சங் நிறுவனத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்று தொழில் முன்னேற்றம் காண முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இவர்மீது லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

52 வயதான ஜே ஒய் லீ, 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை விசாரித்த சியோல் உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதித்துள்ளது.

ஜே ஒய் லீ தென்கொரிய ஆளும் கட்சியைப் பகைத்துக் கொண்டதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஜே ஒய் லீ கைதான பின்னர் சாம்சங் நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் அடுத்து யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ARUNACHALAM