இந்தியாவின், ஒவ்வொரு மாநிலத்திலும், வருவாய்த்துறை தான், நிர்வாகத்துறையாக விளங்குகிறது. வருவாய்த்துறையில் வரும் அலுவலர்களே, மாவட்டத்தை ஆளும் கலெக்டர் என்ற அந்தஸ்துள்ள பதவியை பெறுகின்றனர். வருவாய்த்துறையின் வரலாற்றை, தற்போதைய இளம்தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாநில மையம், வருவாய்த்துறை தொடர்பான தகவல்களை திரட்டி, வெளியிட்டுள்ளது.
கி.மு. 320 -650 வரையிலான குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் தான், நிலவரியை பணமாக வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் மற்றும் துருக்கி சுல்தான் மன்னர்கள் வழியில், பணமாக மட்டுமல்ல, தானியமாகவும் நிலவரி பெறப்பட்டது. புதிய நில அளவை மற்றும் நில வகைபாடு முறை, கி.பி.1538 முதல் 1545 வரையிலான, ஷேர்சா சூரி என்ற மன்னரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிலவரி வசூலிக்க வசதியாக, ஜாகிர்தார்களும், ஜமீன்தார்களும் உருவாக்கப்பட்டனர்.
1772ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னராக இருந்த போது, வருவாய் வாரியம் அமைத்து, முதன்முறையாக கலெக்டர் நியமிக்கப்பட்டனர். அப்போது, ஜமீன்தாரி முறை, ராயத்துவரி, மகசூல்வரி என்று மூன்று வகையான நிலவரி வசூல் செய்யப்பட்டது.கடந்த, 1820ல் ராயத்து வரி வந்த பின்னரே, நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானது. அவர்களிடம் இருந்து நேரடியாக நிலவரி வசூலிக்கப்பட்டது. மகசூல் வரி, 1833ல் அறிமுகமானது. கவர்னர்கள் நிர்வாக வசதிக்காக, இங்கிலாந்து அரசி எலிசபெத் உத்தரவின்படி, 1789ம் ஆண்டு ஜூன் 20ல் சென்னை மாகாணத்தில் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.
இவ்வாரியம் தான், நில அளவை, நிலவரி திட்ட பணி, நில பதிவுருக்கள் பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொண்டது.கடந்த, 1916ம் ஆண்டுக்கு பின், வேளாண்மை, கால்நடை மற்றும் கூட்டுறவு துறைகள் உருவாக்கப்பட்டன. அதன்பின், வருமான வரி, ஆயத்தீர்வை, கடல் சுங்கம், உப்புதுறைகள் அமைக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பின், சமூகநலம் மற்றும் நீதித்துறை அமைக்கப்பட்டது. வருவாய் நிர்வாகம், நில நிர்வாகம் மற்றும் நில சீர்திருத்தம் ஆகிய மூன்று துறைகள் நிறுவப்பட்டன. அனைத்து துறைகளுக்கான தாய் துறையான வருவாய்த்துறை, மாநில நிர்வாக பணிகளுக்கு நேரடியாக உதவும் அச்சாணியாக இருந்து வருகிறது.
வருவாய்த்துறையில், மாவட்ட நிர்வாகம், உட்கோட்ட நிர்வாகம், வட்ட அளவிலான நிர்வாகம், 'பிர்கா' நிர்வாகம், வருவாய் கிராம நிர்வாகம் என, ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 'தாசில்தார்' என்ற பதவி, கி.பி. 1556ல், முகலாய மன்னர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அரேபிய மொழியில், வருவாய் வசூல் செய்யும் அதிகாரி என்பதே தாசில்தார் என்ற வார்த்தைக்கான அர்த்தமாக உள்ளது.தற்போதைய நிலவரப்படி, தாசில்தார் பதவி உருவாகி, 465 ஆண்டுகள் கடந்து விட்டது. வருவாய்த்துறையின் அதிகாரம் மிகுந்த, 'கலெக்டர்' பதவி உருவாகி, 248 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.













