கூகுளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான, முட்டல், மோதல்கள் அதிகரித்துகொண்டே வருகின்றன.ஆஸ்திரேலியாவிலிருக்கும் செய்தி நிறுவனங்களின் கருத்துருவாக்கங்களை பயன்படுத்தும் பட்சத்தில், அந்தநிறுவனங்களுக்கு, கூகுள், பேஸ்புக் உள்ளிட்டவை, ராயல்ட்டி வழங்க வேண்டும் என, ஒற்றைக் காலில் நிற்கிறது, ஆஸ்திரேலிய அரசு.
அப்படி என்றால், ஆஸ்திரேலியாவை விட்டே வெளியேறிவிடுவோம் என, ஒரு மிரட்டலை போடுகிறது, கூகுள். இவ்விவகாரம் ஒருபக்கம் இருக்க, விளம்பரங்களின் மீது, கூகுளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக, அடுத்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவின், சந்தை போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையமான, ஏ.சி.சி.சி., கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, 'அடக்கி' வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்த, ஓர் இடைக்கால அறிக்கையையும் ஆணையம் வழங்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் விளம்பர சந்தை, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சந்தையாக உள்ளது. ஆனால், போட்டிகள் குறைவாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாமலும், பிற தேர்வுகள் இல்லாமலும் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் விளம்பர சந்தையில், சேவைகளை பொறுத்து, கூகுளின் பங்கு, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இதனால், கூகுள் நினைத்தால், ஒரு விளம்பரத்தை அதிக செயல்திறன் கொண்டதாக காட்ட முடிகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்கிறது, ஆணையம். கூகுளுக்கு, அடுத்த நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது.













