ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இனி எளிதாக ஓட்டுநர் உரிமம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்தில் அமல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ள அறிவிப்புகள் பொது ஆலோசனைக்காக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் நபர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.
வரைவு அறிவிப்பில் பொதுமக்களின் ஆலோசனைப் பெற்ற பிறகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













