தற்சார்பு இந்தியா என்ற ஆத்மனிர்பர் பாரதம் என்பதை ஊக்குவிக்க வேண்டும், அதற்கு ஆதரவு தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அப்போதிருந்து, பல உள்ளூர் டெவலப்பர்கள் மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அத்தகைய ஒரு செயலி தான் கூ ( Koo) - இது ட்விட்டருக்கு இந்திய மாற்றாக உள்ள சமூக ஊடக செயலி.
பல அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் இந்திய சமூக ஊடக நெட்வொர்க்கான கூ ஊடகத்தில் பதிவுகளை இடத் தொடங்கியுள்ளனர். சட்டம் மற்றும் நீதி துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர், கூவில் இணைந்த முக்கிய அமைச்சர்களில் அடங்குவர்.
விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ள நிலையில், முக்கிய அமைச்சர்கள் இந்த தளத்திற்கு மாறுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், ட்விட்டருக்கு மாற்றான, உள்நாட்டு செயலியான கூ-வை வலுப்படுத்தும் நோக்கம் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கூ, என்பது ட்விட்டருக்கு ஒரு இந்திய மாற்று. இந்திய மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளம் Koo, அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் மார்ச் 2020 இல் உருவாக்கப்பட்டது. ட்விட்டரைப் போலவே, கூ ஒரு மைக்ரோ பிளாக்கிங் தளமாகும். இந்த தளம் ஆகஸ்ட் 2020 இல் இந்திய அரசு நடத்திய தற்சார்பு இந்தியாவின் புதுமை சவாலையும் வென்றது.
இந்த செயலியின் முக்கிய அம்சம் பல இந்திய பிராந்திய மொழிகளை இது உள்வாங்குகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, தமிழ், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா மற்றும் அஸ்ஸாம் மொழி ஆகியவற்றில் எழுதலாம்.
கூவில் உள்ள பயனர்கள் பதிவுகள், ஆடியோ, வீடியோ, புகைப்படங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ட்விட்டரைப் போலவே, கூவும் பயனர்கள் பரஸ்பரம் டி.எம் வழியாக சாட் செய்யலாம். மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளத்தில் நீங்கள் கருத்துக்கணிப்புகளையும் நடத்தலாம்.













