மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பத்தாவது கிமி இல் குத்தாலம் எனும் திருதுருத்தி உள்ளது , காவிரியின் நடுவில் துருத்தியபடி உள்ளதால் துருத்தி எனப்பட்டது. ஒரு காலத்தில் உத்தால வனமாக இருந்ததால் , கால போக்கில் உத்தாலம் குத்தாலம் ஆகிப்போனது.
இறைவர் உத்தவேதீஸ்வரர், உக்த வேதீஸ்வரர்,சொன்னவாறு அறிவார்
இறைவி அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்த நாயகி
தல மரம் : உத்தாலமரம்,
தீர்த்தம் : பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம்
சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார்.
சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம் ஆகும். அப்பர், சுந்தரர் ,திருஞானசம்பந்தர்ஆகியோர் பாடல்கள் உள்ளன.
திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்த அம்பிகை குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.
இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற் ஒரு வகை ஆத்தி மரம்.அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும்.
பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து ""நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, ""இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.
மூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.
அக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது. விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது. வருணனின் சலோதரம் நீக்கியது. காளி, சூரியன், காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது. சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது. சிவபக்தனின் காச நோயை போக்கியது போன்ய பல பெருமைகளை உடையது. தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார்.
ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. 5 நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது.
இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப் பிரகாரங்களோடு அமைந்துள்ளன. அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சண்முகர் கலையழகுடன் காட்சி அளிக்கிறார்.
பிரகாரத்தின் வணகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன.இவற்றை நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டும். அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.
கார்த்திகை ஞாயிறு நாள்கள் இத்தலத்தில் விசேஷம். சூரியன் - கதிரவன் வழிபட்டுத் தவஞ்செய்த இடம் கதிராமங்கலம் என்றழைக்கப்படுகின்றது. "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் புலம்பித் திகழுமா காவிரி" ஆலயத்தின் வடபால் ஓடுகின்றது. மற்றதாகிய சுந்தர தீர்த்தம் - பதும தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். இது ஆலயத்தின் வடமேற்கிலுள்ளது. இவை தவிர, இத்தலத்தைச் சுற்றிலும் அக்கினி தீர்த்தம், காளி தீர்த்தம், புண்டரீக தீர்த்தம், காம தீர்த்தம், கதிரவ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருவாவடுதுறை, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, சூரியனார் கோயில், கதிராமங்கலம், திருமணஞ்சேரி, திருப்பந்தணை நல்லூர், திருவேள்விக்குடி முதலிய தலங்கள் உள்ளன. ஆலயத்துள் அலங்காரமண்டபமும், காவிரிக் கரையில் தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன.
இத்திருக்கோயில் தருமையாதீனத்திற்குச் சொந்தமானது. நாடொறும் காரண, £கமிக ஆகமங்களின் முறைப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கல்வெட்டில் இத்தலம் 'வீங்குநீர் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
கல்வெட்டில் இத்தலம் 'வீங்குநீர் திருத்துருத்தியுடைய மகாதேவர்', உடையார் சொன்னவாறறிவார்'. 'திருக்கற்றளி மகாதேவர்' என்று குறிக்கப்படுகிறது. இத்தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் - திருத்துருத்திப் புராணம் - பாடப்பட்டுள்ளது. நாடொறும் ஐந்து கால பூஜை.
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,
- A. Gurumoorthi, Kallakurichi













