கல்வி நலம் அருளும் கோயில்கள் - சரஸ்வதி பூஜை ஸ்பெஷல்!

SOCIAL SHARE
Pin It
சரஸ்வதி (தாடிக்கொம்பு) இத்தலம் திண்டுக்கல்-வேடசந்தூர் பாதையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சௌந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மண்டூக மகரிஷி தன் சாபம் நீங்க தவமிருந்த தலம் இது. 500 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். கல்வியை அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்துள்ளன. திருவோண நட்சத்திர நாளில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகத்தோடு விசேஷ பூஜை நடக்கிறது. ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனத்தைப் படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். சரஸ்வதி பூஜை நாளில் சரஸ்வதிதேவிக்கு விசேஷ ஆராதனை, பூஜைகள் நடைபெறுகின்றன.
 
ஞான சரஸ்வதி (உத்தமர்கோவில்)ஈசன் பிட்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற தலம், பிச்சாண்டார் கோயில் என்றழைக்கப்படுகிறது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த தலம். பெருமாள் பிரசன்னமாகி, ‘‘நீ இங்கேயே இருக்கலாம். உனக்கென்று ஆலயங்கள் இல்லையென்று கவலையுறாதே. தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் இங்கே உனைக் காண வருவார்கள்” என்று சொல்லி, தன் ஆலயத்திலேயே அமர்த்தி வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மனைப் போல சரஸ்வதிக்கும் தனிச் சந்நதி உள்ளது. இவள் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுகிறாள். வீணை இல்லாமல், கையில் ஓலைச் சுவடியோடும் ஜபமாலையோடும் தேவி காட்சியளிப்பது அபூர்வமானது.
 
ஞானவாணி (திருக்கண்டியூர்)இத்தல ஈசனுக்கு பிரம்ம சிரகண்டீசர் என்று பெயர். பிரம்மாவுக்கான தனிக்கோயில் இது என்று சொல்லலாம். ஜீவன் ததும்பி நிற்கும் அற்புதச் சிலை. சரஸ்வதி தேவி தனது கணவனோடு அடக்கமாக, நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞான வாணியாக வீற்றிருக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரி வழங்கும் வெள்ளாடை நாயகி. இருவரையும் அகங்குளிர தரிசிக்க, தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இந்தக் கோயிலுக்கு எதிரிலேயே ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயமும் உள்ளது. ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள்தான் நீக்கினார். இந்தப் பெருமாள் ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கென்று சந்நதியும் அமைந்துள்ளது.
 
கலைவாணி (வாணியம்பாடி) இத்தலத்தின் பெயரே வாணி என்றுதான் தொடங்குகிறது. பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், இத்தல அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ-பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணையேந்திய வாணி அருள்கிறாள். வேலூர்-கிருஷ்ணகிரி பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.
 
வேத சரஸ்வதி (வேதாரண்யம்) வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. நாகப்பட்டினத்திலிருந்து 45கி.மீ., திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
 
எண்கர சரஸ்வதி (காஞ்சிபுரம்) யதோத்தகாரி பெருமாள் கோயிலின் கருவறையில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பாதத்தின் அருகில் அமர்ந்தவாறு சரஸ்வதி காட்சி தருகிறாள், கலைமகள். காமாட்சியம்மன் ஆலயத்திலும், கச்சபேஸ்வரர் கோயிலிலும் சரஸ்வதிக்கு சந்நதிகள் உள்ளன. காமாட்சியம்மன் கோயிலில் எண் கரங்கள் கொண்ட சரஸ்வதியைக் காணலாம்.
 
சோபனப்படி சரஸ்வதி (உத்திரமேரூர்) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்திருக்கும் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் சோபனப்படிக்கு கீழே சரஸ்வதியின் திருவுருவம் அமைந்துள்ளது.
 
அட்சர பீடம் (திருவாரூர்) திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அட்சரங்களே தனிச் சந்நதியில் கொலுவிருக்கின்றன. இந்த அட்சரங்களை தனி இறைவன் போல வழிபடுகிறார்கள். அட்சர பீடம் என்று அதற்குப் பெயர். 51 அட்சரங்களின் ஒலியில் உலகமே அடக்கம் என்பதை உணர்த்திடும் வகையில் உயிர் எழுத்துகளை ஒரு திருவாசியின் முகப்பிலும் மெய்யெழுத்துகளை பின்புறமும் செதுக்கி ஆவாஹனம் செய்துள்ளனர். இது அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறுவர். கமலாம்பிகையை சுற்றி வரும்போது தென்புறம் அட்சரபீடத்தையும், வடபுறம் சரஸ்வதி சந்நதியையும் தரிசிக்கலாம்.
 
தாமரைக்குள சரஸ்வதி (கேரளம்) கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கன் பரவூரில் பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர், மாதம் ஒருமுறை கொல்லூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். வயதான காலத்தில் இவரால் கொல்லூர் செல்ல முடியவில்லை. மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி, ‘‘நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு. அங்கு நான் கலைவாணியாக அமர்ந்து அருள்பாலிக்கிறேன்’’ என்றாள். அதன்படி தாமரைப் பூக்கும் தடாகம் உருவாக்கப்பட்டு, நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது. இவளது திருநாமம், தட்சிண மூகாம்பிகை. தேர்வு எழுதிவிட்டு, அடுத்த வகுப்புக்கு செல்லும் குழந்தைகள் அடுத்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெறவும், ஞாபகசக்தி பெருகவும் இங்கு அழைத்துச் செல்கின்றனர். இங்கு தரப்படும் கஷாயத்தை பருகினால் ஞாபகசக்தி கூடும் என்று நம்புகின்றனர்.
 
மாதங்கியான சரஸ்வதி (சேலம்) சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதியின் அம்சமான ராஜமாதங்கி எழுந்தருளியிருக்கிறாள். மதங்க முனிவரின் தவத்தின் மகிமையால் அவருக்கு மகளாக மாதங்கியாக அம்பாள் அவதரித்தாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ராஜமாதங்கி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமல்லவா? எனவே, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை வாரி வாரி வழங்குகிறாள்.
 
அரண்மனை சரஸ்வதி (தஞ்சாவூர்) தஞ்சாவூர் ராஜவீதி அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பான சரஸ்வதி ஆலயம் உள்ளது. கல்வி வளம் சிறக்க வணங்கவே எழுப்பப்பட்ட ஆலயமாக இது கருதப்படுகிறது.
 
நான்முகனுடன் நாமகள் (கும்பகோணம்) கும்பகோணத்தில் உள்ள பிரம்மன் கோயிலில் பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப் பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், தொழிலில் மேன்மையடையவும் இங்கு ‘பிரம்ம சங்கல்ப பூஜை’ செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி, காயத்ரிக்கு விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இத்தலத்தில் சரஸ்வதிதேவி வரப்ரசாதியாய் திகழ்கிறாள்.
 
சரஸ்வதி சமேத பிரம்மா (சென்னை) சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலம் என்கிற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீலக்ஷ்மி குபேரர் கோயில். இங்கு கன்னி மூலையில் சரஸ்வதி சமேத பிரம்மா தனிச் சந்நதியில் உள்ளார். இவருக்கு மஞ்சள் காப்பு நெஞ்சில் சாத்தி வழிபாட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டுவர நமது தலை எழுத்து மிக நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மாணவ, மாணவியர்கள் இந்த மஞ்சளை தரித்துக் கொண்டால் ஞாபக சக்தி பெருகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
 
கபால கிண்ணத்தில் கலைமகள் (பெரியபாளையம்) சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள். பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், வீரம், கல்வி மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.
 
சரஸ்வதி முன் அன்னவாகனம் (சென்னை) சென்னை போரூரில் உள்ள மதனானந்தபுரத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்காம்பிகை என மூவரும் அடுத்தடுத்த சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். சரஸ்வதியின் முன் அன்னப்பறவை வீற்றிருப்பது அழகு. நவராத்திரி ஒன்பது நாட்கள் இத்தலத்தில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. விஜயதசமி அன்று வெகுசிறப்பாக சண்டியாகம் நடைபெறுவது இத்தல விசேஷம்.
 
இரு தேவியருடன் சரஸ்வதி (திருநாகேஸ்வரம்) கும்பகோணம் அருகிலுள்ளது திருநாகேஸ்வரம், சுசீல முனிவரின் மகன் சுகர்மன், வனத்தின் வழியே சென்று கொண்டிருந்த போது, நாக அரசனான தக்கன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. தன் மகனை தீண்டிய தக்கனை, மானிடனாக பிறக்கும்படி முனிவர் சபித்தார். சாபவிமோசனம் பெற, தக்கன், பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே நாகமாகிய தக்கனுக்கு அருளியதால் நாகநாதராக இங்கே அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பாள் கிரிகுஜாம்பிகை எனப்படுகிறாள். இங்கு துணைவியருடன் கூடிய ராகுவுக்கு தனிச் சந்நதி உள்ளது. இதுதவிர விநாயகரும், யோகராகுவும் ஒரு சந்நதியில் உள்ளனர். இவர்களை வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாகும். மேலும், இங்கு சரஸ்வதி, லட்சுமி, கிரிகுஜாம்பிகை ஒரே சந்நதியில் உள்ளனர். முப்பெருந்தேவியர்களும் ஒரே கருவறையில் திருவருட்பாலித்து பக்தர்களுக்கு கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றை அருள்கின்றனர். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம்.
 
கம்பர்-சரஸ்வதி (காஞ்சிபுரம்) காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் கலைமகள் தனி ஆலயத்தில் எழுந்தருளி அருளாசி வழங்கி வருகிறாள். சரஸ்வதி தேவியின் பேரருள் பெற்ற தவப்புதல்வர்களில் கம்பர் முதன்மையானவர். இவர், காஞ்சியில் வாழ்ந்திருந்த காலத்தில் கீழ் அம்பியில் சர்வகலாசாலை நடத்தினார். அழியாத கம்ப ராமாயணத் தை இவர் எழுதத் தொடங்கியது காஞ்சியிலாகும். அன்னை சரஸ்வதியின் மேல் ஆழ்ந்த பக்தியைக் கொண்ட கம்பர், தமது கையமைப்புக்குள் அடங்கக்கூடிய ஓரடி உயரம் கொண்ட சரஸ்வதி தேவி சிலையை தாம் செல்லும் ஊர்கள்தோறும் எடுத்துச் செல்வார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும்போது, காஞ்சி- வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கி கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கி அருள்மிகு சிந்தாமணி வழித்துணை விநாயகரை வழிபட்டார்.
 
இவ்விநாயகர் ஆலயம், தொண்டை மண்டல மன்னர் பிச்ச நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அச்சமயம் அன்னை சரஸ்வதிக்கு திருக்கோயில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கவிச்சக்ரவர்த்தி எண்ணியதாக வரலாற்றுச் சுவடுகள் தாங்கிய கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர் காலத்தில் அந்த எண்ணம் ஈடேறவில்லை. ஆனால், ஆண்டுகள் பல ஆனபிறகு, கம்பரின் ஆழ்ந்த பக்தியின் காரணமாக தாங்கி கிராமம் அருள்மிகு வழித்துணை விநாயகர் ஆலய சுற்று வளாகத்தில் அருள்மிகு சரஸ்வதி சிலையொன்று புதைபொருளாகக் கிடைத்தது. விநாயகர் ஆலயத்திலேயே பக்தர்களின் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டிருந்த இந்த அன்னைக்கு விநாயகர் ஆலயம் அருகிலேயே தனிக்கோயில் கட்டப்பட்டது. இத்துடன் கம்பருக்கும் அவர் மனைவி நிகர்த்தவல்லிக்கும் சிலைகள் உருவாக்கப்பட்டு உடன் வைக்கப்பட்டது.
 
பேச்சியம்மன் (மதுரை)கிராமக் கோயில்களில் நாம் காணும் பேச்சியம்மன், சரஸ்வதியின் அம்சம்தான். பேச்சு+ஆயிதான் பேச்சாயி என்றாயிற்று. பேச்சுத்திறன் குன்றியவர்கள் இந்த அம்மனை வேண்டிக்கொண்டால், தம் குறைகள் தீர்ந்து பேச்சாற்றல் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். மதுரையிலுள்ள பேச்சியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. சிறு சிறு கிராமங்களில் தனிச் சந்நதியோடும் இந்த பேச்சியம்மன் திகழ்கிறாள்.
 
பிரம்மவித்யாம்பிகை (திருவெண்காடு) புத்தியை இயக்கும் சக்திகளில் மிகவும் முக்கியமானது புதன் கிரகம். ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை வளமும் தீர்மானிக்கப்படுகின்றன என்பார்கள். எனவே, கல்வியில் சிறந்தோங்க புத பகவானின் அருளைப்பெற வேண்டியது அவசியம். திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சந்நதி உள்ளது. மேலும், மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்ம வித்யாம்பிகை எனும் திருப்பெயரோடு அம்பாளும் திகழ்கிறார்கள். அம்பாள் இங்கே சரஸ்வதிதேவியாகவே வழிபடப்படுகிறாள். இக்கோயில் கல்வி வரமருளும்; புத்தியை வலுவூட்டும். சீர்காழியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இக்கோயில்.
 
- A. Gurumoorthi

ARUNACHALAM