தமிழக அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய மோட்டர் பைக் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையத்தில் பெற்று உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் :
விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் இரண்டு கைகளும் சிறப்பாக இயங்க வேண்டும்.
இரண்டு கால்களும் செயலிழந்தவராகவோ அல்லது தமிழக அரசின் வழிகாட்டுதல்படி இரண்டு கால்களின் ஊனத்தின் நிலை 75% க்கு மேல் இருக்க வேண்டும்.
ஏறக்குறைய முழுவதுமாக நடக்க முடியாதவர்களுக்கும் மற்றும் கால்களின் ஊனத்தின் தன்மை 75%க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல மையத்தின் மூலம் மோட்டார் பைக் வழங்க உத்தரவு வழங்கப்படுகிறது.
ஏனைய மாற்றுத்திறனாளிகள் பெறுவது எப்படி?
கால்கள் செயலிழந்தவர்கள் தவிர மற்ற மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு வழங்கிய இலவச மோட்டார் பைக் வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதை பெறுவது எப்படி என பார்க்கலாம்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மோட்டர் பைக் வழங்கப்படுகிறது.
ஆகவே தங்கள் பகுதியிலோ அல்லது தங்களுக்கு தெரிந்த பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரோ அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகி தமிழக அரசின் இலவச மோட்டர் பைக்கிற்கான ஆணை கடிதம் மற்றும் அதற்கான தொகைக்கான காசோலையையும் பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கொடுப்பதன் மூலம் பைக் பெற வாய்ப்புண்டு.













