உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அந்நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்த சோனியா அக்விடோ என்ற 41 வயது நிரம்பிய பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது. பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் சோனியாவுக்கு எந்த விதமாக உடல்நலக்குறைவும், பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து அக்விடோ கடந்த 1-ம் தேதி எந்தவித உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகாமல் திடீரென உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்த சம்பவம் போர்ச்சுகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார ஊழியர் சோனியா அக்விடோவின் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போர்ச்சுக்கல் சுகாதார ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் மக்கள் தொகை சுமார் 1 கோடியாகும். அங்கு இதுவரை 4 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 7 ஆயிரத்து 118- பேர் உயிரிழந்துள்ளனர்.













