இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. 56,211 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
''பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தபோது, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆதலால், அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
முகக்கவசத்தை முறையாக மூக்கையும், வாய்ப் பகுதியையும் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடித்து நடப்பதைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள், முகக்கவசத்தை முறையாக அணியாத பயணிகளிடம் போலீசார் உதவியுடன், விமான நிலைய அதிகாரிகள் உடனடி அபராதம் வசூலிக்கப்படும்".













