இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது, தொடர்ந்து சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை தொடர்ந்து தனது தளத்தில் அனுமதித்து வந்த ட்விட்டர் நிறுவனம், அரசின் எச்சரிக்கைக்கு பின் போராட்டத்தை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கியது. மேலும், ட்விட்டருக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில், ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கூ (koo) எனும் சமூக ஊடகத்திற்கு அரசு ஆதரவு அளித்து ஊக்குவித்து வருகிறது.
மேலும், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.
இந்நிலையில், ஒரு மாத்திற்கு முன்னதாக ரஷ்யாவில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுவர்கள் மத்தியில் ஆபாசத்தை பரப்பும் வகையிலும், போடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய (Russia) அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, மாஸ்கோ நீதிமன்றம் இணைய சட்டத்தை மீறியதற்காக டிவிட்டருக்கு 8.9 மில்லியன் ரூபிள் (சுமார் 1,16,568 அமெரிக்க டாலர்) அபராதம் விதித்தது. இந்த அபராத தொகையை டிவிட்டர் 60 நாட்களுக்குள் கட்ட வேண்டும்.
கடந்த மாதம், ரஷ்யாவின் தொலைத் தொடர்பு கண்காணிப்புக் குழுவான ரோஸ்கோம்னாட்ஸர் (Roskomnadzor), வன்முறை, ஆபாசம், போன்றவற்றை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறிய ட்விட்டரின் செயல்பாட்டை தற்காலிகமாக முடக்கியது. மேலும் வருங்காலத்தில், டிவிட்டரை முற்றிலுமாகத் தடை செய்யலாம் எனவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.













