50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தரவு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கணக்குகளின் தரவு முதலில் 2019 இல் கசிந்ததாக கூறப்படுகிறது.
மின்னஞ்சல் முகவரி, பெயர், தொலைபேசி எண், பிறந்த நாள், உறவுகள் விபரம் மற்றும் இது போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் இப்போது ஆன்லைன் ஹேக்கர்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என சைபர் கிரைம் நிபுணர் மற்றும் பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.
"சுமார் 53,30,00,000 பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இலவசமாக கசிய விடப்பட்டுள்ளன" என்று ஹட்சன் ராக் சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அலோன் கால் (Alon Gal) ட்விட்டரில் தெரிவித்தார்.
கசிந்த தகவல்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கணக்குகள் தொடர்பான தகவல்கள் என்றும், பயனர்கள் இன்னும் கணக்கில் பதிவு செய்துள்ள அதே தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
"இதன் அர்த்தம் உங்களிடம் உள்ள பேஸ்புக் கணக்குடன் இணைந்த தொலைபேசி எண் கசிந்திருக்கலாம்" என்று Alon Gal கூறினார்.
இருப்பினும், பேஸ்புக் இந்த தகவலை மறுத்துள்ளது. மேலும் இந்த பிரச்சினை 2019 ஆம் ஆண்டிலேயே சரி செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.
"இது பழைய தரவுகள், இது முன்னதாக 2019 இல் தெரிவிக்கப்பட்டது" என்று கூறிய பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் "2019 ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த சிக்கலை நாங்கள் கண்டறிந்து சரிசெய்தோம்" என கூறினார்.
மறுபுறம், கிட்டத்தட்ட 32 மில்லியன் அமெரிக்க கணக்குகள் மற்றும் 20 மில்லியன் பிரெஞ்சு கணக்குகள் தொடர்பான தகவல்கள் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக Alon Gal கூறுகிறார்.
"இந்த முக்கியமான தகவல்கள், ஹேக்கர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியோருக்கும் உதவும் வகையில் இருக்கும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.













