கொரோனா பாதித்தவர்களின் வீடுகளுக்கு இலவச உணவு!

SOCIAL SHARE
Pin It

குஜராத் மாநிலம் வதோதராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு, ஆரோக்கியமான உணவை இலவசமாக ஒருவர் வழங்கி வருகிறார். அவர் இதனை டுவிட்டரில் பகிர, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நீண்ட காலமாக இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. ஆனால் இந்த தொற்று நோயின் காலம் தான் நம் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தவும் உதவியது.

கொரோனா பலி அதிகரித்து வருவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மீண்டும் படை எடுத்து வருகின்றனர். இச்சூழலில், நல்ல மனம் கொண்ட சிலர், தங்களால் இயன்ற உதவியை கொரோனா காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டர் பயனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு, அவர்கள் தனிமைப்படுத்தி கொண்ட காலம் முழுவதும் இலவசமாக, உணவு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். சுகாதாரமான மதிய உணவு மற்றும் இரவு உணவை அவர்கள் வீட்டு வாசலில் வந்து வழங்கி உதவுவதாக அவர் பதிவிட்டிருக்கிறார்.

டுவிட்டரில் தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்பு கொள்ளும் உள்ளூர் மக்களுக்கு தான் உதவ தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த சுபால் ஷா என்ற அந்த டுவிட்டர் பயனருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுபால் ஷாவின் தன்னலமற்ற சேவையை, அவரை தொடர்பு கொண்டு சிலர் பெற்று வருகின்றனர். அவருக்கு உதவ தயாராக இருப்பதாக என்ஜிஓ.,க்களும் முன் வந்துள்ளன.

ARUNACHALAM