பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள டூலியஸ் என்கிற ஆற்றில் பாலை ஏற்றிச்சென்ற பெரிய டிரக் விபத்துக்குள்ளாகியது. ட்ரக்கில் ஏற்றி வந்த பல லிட்டர் பால் ஆற்றில் கொட்டியது. இதனை அடுத்து ஆறு செல்லும் பாதைகள் பால் தண்ணீருடன் கலந்து சென்றது. இதனை அப்பகுதியில் வசிக்கும் பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
அதிகாலை இந்த விபத்து நேர்ந்ததால் இந்த ஆறு ஓடும் பகுதியில் வசித்துவந்த கிராம மக்கள் ஆறு திடீரென வெள்ளை நிறத்தில் ஓடியதை கண்டு அதிர்ந்தனர். ரசாயனம் ஏதாவது ஆற்றில் கலந்து இருக்குமோ என்று அஞ்சினர். பின்னர் ஆற்றில் பால் கலந்தது தெரியவந்து நிம்மதி அடைந்தனர். சில மணி நேரங்களில் இந்த பால் ஆற்றோடு சென்று கடலில் கலந்தது. ஆறு பழைய நிறத்துக்கு மாறியது. இச்சம்பவம் பிரிட்டனில் வைரலாகியுள்ளது.













