இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 2,812 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் மருந்து பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்தியாவில் மோசமடைந்து வரும் கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியை வழங்குகிறது. மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதியை அளிக்கிறது,' என அவர் குறிப்பிட்டுள்ளார்.













